சுனந்தா எப்படி இறந்தார்?: சசி தரூரிடம் 5 மணிநேரம் துருவித் துருவி விசாரித்த டெல்லி போலீஸ்
டெல்லி: சுனந்தா புஷ்கரின் மரணம் குறித்து டெல்லி போலீசார் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரிடம் 5 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் தற்கொலை என்று டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அது கொலை வழக்காக மாற்றப்பட்டது.
சுனந்தா ஆல்பிராக்ஸ் என்ற மாத்திரையை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதால் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து டெல்லி போலீசார் சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த குழு முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரிடம் இரண்டு முறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் போலீசார் சசி தரூரிடம் சனிக்கிழமை 5 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
சுனந்தாவிடம் ஆல்பிராக்ஸ் மாத்திரை எப்படி அளவுக்கு அதிகமாக இருந்தது என்று போலீசார் தரூரிடம் கேட்டுள்ளனர். மேலும் சுனந்தா இறப்பதற்கு முந்தைய தினம் கணவன், மனைவி இடையே நடந்த தகராறு குறித்தும் தரூரிடம் கேட்கப்பட்டுள்ளது.
தரூர் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அமைதியாக பதில் அளித்துள்ளார். சுனந்தாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்றும், அவர் எடுத்துக் கொண்ட மாத்திரைகளால் தான் இறந்தார் என்றும் தரூர் திரும்பத் திரும்ப கூறியுள்ளார்.