பெஷாவர் தாக்குதல் எதிரொலி – டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு
டெல்லி: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையால் தலைநகர் டெல்லி உட்பட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினம் மற்றும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தாலிபான், லஷ்கர்-இ-தொய்பா, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்துவதற்கான அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் எச்சரித்திருக்கிறது.
பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு தமிழக காவல்துறை இயக்குநர் அசோக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.