‘எப்போது செயல்படப் போகிறீர்கள்...?’: டெல்லி பிரச்சாரத்தில் மோடியைத் தாக்கிய ராகுல்!
டெல்லி: ஏழைகளைப் புறக்கணித்துவிட்டு, பணக்காரர்களுக்கு உதவும் வகையில் மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நேற்று தனது முதலாவது பிரசாரத்தைத் தொடங்கினார். காங்கிரஸ் சார்பில் சதர் பஜாரில் போட்டியிடும் அஜய் மாக்கன், கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிடுபவரும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளுமான ஷர்மிஸ்டா முகர்ஜி ஆகியோரை ஆதரித்து திறந்தவெளி வேனில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, எப்போது பேச்சை நிறுத்திவிட்டு செயல்பாடுகளைத் தொடங்கப் போகிறது? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மூன்று, நான்கு தொழிலதிபர்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் இந்த அரசு, ஏழை மக்களை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
காங்கிரஸ், ஏழை மக்களுக்கான கட்சியாக விளங்கி வருகிறது. இத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று தில்லியில் மீண்டும் ஆட்சி அமைப்போம். அடிப்படை தேவைகளாக கருதப்படும் குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை குறைந்த விலையில் தில்லி மக்களுக்கு காங்கிரஸ் அளிக்கும். இதேபோல் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர பணிகளை அளிப்போம். மேலும், ஏழை மக்களுக்கு தங்கும் இடங்களை அளிக்கவும் உறுதி ஏற்போம்' என்றார்.
ராகுல் மேற்கொண்ட பிரச்சாரப் பேரணி, அங்கீகாரமற்ற காலனிகள் வழியாக சென்றது. அப்போது அங்கிருந்த மக்கள், ராகுலிடம் குடிநீர், சுகாதார வசதி உள்ளிட்ட முக்கிய பிரச்னையாக உள்ளதாக புகார் தெரிவித்தனர்.