மின் நிறுவனத்தின் 'கட்' மிரட்டல்.. கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி... டெல்லியில் மின்கட்டணம் 8% உயர்வு
டெல்லி: டெல்லியில் 3 தனியார் நிறுவனங்கள் மின்கட்டணத்தை 6 முதல் 8 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தனியார் நிறுவனங்கள் விநியோகிக்கும் மின்சாரக் கட்டணம் இன்று முதல் 8 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், 50 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி பதவிக்கு வந்தால் மின்கட்டணம் பாதியாக குறைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, ஆம் ஆத்மி அரசு பதவியேற்ற பின்னர், மின்கட்டணம் குறைக்கப்பட்டது. இதற்கு டெல்லிக்கு மின்சாரம் வழங்கி வரும் டாடா உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.
தணிக்கைக்கு உத்தரவு
டெல்லியில் மின்சார வினியோகத்தை ‘யமுனா பவர் லிமிடெட்', ‘ராஜ்தானி பவர் லிமிடெட்', ‘டாடா பவர் டிஸ்டிரிபியூஷன் லிமிடெட்' என்ற 3 நிறுவனங்கள் செய்து வருகிறது. அந்த நிறுவனங்களை இதுவரை ஏன் தணிக்கை செய்யவில்லை என்று டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசு கேள்வி எழுப்பியது. அரசின் கேள்விக்கு அந்த நிறுவனங்கள் கொடுத்த பதில் அரசுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனை அடுத்து கணக்குகளை தணிக்கை செய்ய அரசு உத்தரவிட்டது.
மின் உற்பத்தி நிறுத்தம்
இந்நிலையில் டெல்லிக்கு மின்சாரம் வினியோகம் செய்யும் நிறுவனம் ஒன்று மின் உற்பத்தியை நிறுத்தப்போவதாகவும், இதனால் நாளையில் இருந்து மத்திய மற்றும் கிழக்கு டெல்லியில் 8 முதல் 10 மணி வரையில் மின்வெட்டு ஏற்படும் என்று அந்த நிறுவனம் மிரட்டியுள்ளதாக கூறியுள்ளார் கெஜ்ரிவால். அவ்வாறு நடந்தால் அவர்களின் நிறுவனத்தின் லைசன்ஸ் ரத்து ஆகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மின்கட்டணம் உயர்வு
இந்த நிலையில், வருவாய் கணக்குகளை தணிக்கை செய்தபின்னர், டாடா, யமுனா மற்றும் ராஜ்தானி ஆகிய 3 தனியார் நிறுவனங்களும் மின்கட்டணத்தை 6 முதல் 8 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.
50 லட்சம் மக்கள்
இதனால் மத்திய மற்றும் கிழக்கு டெல்லி பகுதிகளில் வாழும் 50 லட்சம் குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
சமீபத்தில்தான் மின் கட்டணத்தை குறைத்து டெல்லி மக்களை குஷிப்படுத்தியிருந்தார் கெஜ்ரிவால். ஆனால் இப்போது மீண்டும் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.