ஆண்டு இறுதியை "அழுகிய முட்டை"யுடன் முடித்த கெஜ்ரிவால்... பேரணியில் முட்டை வீச்சு!
டெல்லி: மின்கட்டண உயர்வை கண்டித்து டெல்லியில் பேரணி நடத்திய அர்விந்த் கெஜ்ரிவால் மீது அழுகியமுட்டை வீசப்பட்டது. அந்த முட்டை வீச்சிலிருந்து தப்பிய கெஜ்ரிவால், இந்த தாக்குதலுக்கு பா.ஜ.கவும், காங்கிரசும் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
டெல்லியில் மின்சாரம், கட்டண உயர்வை கண்டித்து கெஜ்ரிவால் இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் அவர் பேசிக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் மேடையை நோக்கி முட்டைகளை வீசினர். ஆனால் கெஜ்ரிவால் அருகே மட்டுமே இந்த முட்டைகள் விழுந்தன. இது போல் ஜெனரேட்டர் மீது இரும்பு ராடுகளும் வீசப்பட்டன.
இந்த சம்பவத்தை பார்த்த ஆம்ஆத்மியின் தொண்டர்களில் ஒருவரான தர்மேந்தர், கூறுகையில், கூட்ட மேடை பின்புறம் இருந்து சிலர் முட்டைகளை வீசினர். நல்லவேளையாக கெஜ்ரிவால் மீது படவில்லை என்றார். இந்த சம்பவத்திற்கு காரணம் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும்தான் காரணம் என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
கெஜ்ரிவால் மீது முட்டை, மை வீசப்படுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது கறுப்பு மை, தார் எண்ணெய், போன்றவை வீசப்பட்டன.
டெல்லியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 49 நாட்கள் முதல்வராக இருந்த கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் திறந்த வேனில் மக்களை சந்திக்க சென்ற போது தொழிலாளி ஒருவர் கெஜ்ரிவாலின் கன்னத்தில் அறைந்தார். இப்போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட போது முட்டை வீசப்பட்டுள்ளது.