டெல்லியில் 8 மாதங்களில் 1,121 பாலியல் குற்றங்கள் பதிவு…
டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 1,121 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 13 ஆண்டுகளிலேயே இப்போதுதான் அதிக அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பாதுகாப்பற்ற நிலை
நாட்டின் தலைநகரான டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே நீடிக்கிறது. குறிப்பாக கடந்த 8 மாதங்களில் மட்டும் ஆயிரத்து 121 பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளன..
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2008 ஆம் ஆண்டு முதல் அதிகரித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள், நீதி வேண்டி துணிவுடன் காவல்நிலையத்தை தேடி வருவதையே இந்த குற்றப்பதிவு அறிக்கை காட்டுவதாக டெல்லி போலிசார் தெரிவிக்கின்றனர்.
13 ஆண்டுகளில் அதிகம்
கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு அதிக அளவு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
2011ம் ஆண்டு
2010ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 507 குற்ற வழக்குகளும், 2011ம் ஆண்டு 572 குற்றவழக்குகளும் பதிவாகியுள்ளன.
2012ம் ஆண்டு
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குப்பதிவு 468 ஆக இருந்தது. டிசம்பர் 16ம் தேதி நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பின்னர் அதிக அளவில் பாலியல் குற்றவழக்குகள் பதிவாகியுள்ளன.
குற்றவாளிகள் கைது
கடந்தாண்டு டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர். டெல்லி போலீசாரால் பதிவு செய்யப்படும் வழக்குகளில் 80 சதவீத குற்றவாளிகள் கைது செய்யப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.