டெல்லியில் தண்ணீருக்காக பெண்கள் சேலையை இழுத்து குடுமிபிடி சண்டை
டெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள மஹிபால்பூர் கிராமத்தில் தண்ணீருக்காக பெண்கள் அடித்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
தெற்கு டெல்லியில் உள்ள மஹிபால்பூர் கிராமத்தில் கடும் தண்ணீர் பஞ்சமாக உள்ளது. இந்நிலையில் தண்ணீர் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று அந்த கிராமத்திற்கு வந்தது. லாரியை பார்த்ததும் பெண்கள், சிறுமிகள் குடங்களுடன் ஓடி வந்தனர்.
தண்ணீர் பிடிப்பதில் பெண்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பெண்கள் ஒருவரையொருவர் தாக்கி, சேலையை பிடித்து இழுத்து, தலைமுடியை பிடித்து இழுத்து ஆக்ரோஷமாக சண்டை போட்டனர்.
இந்த சண்டையின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மஹிபால்பூருக்கு சென்று நிலைமையை கண்டறியுமாறு நீர்வளத் துறை அமைச்சர் கபில் மிஸ்ராவுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து மிஸ்ரா மஹிபால்பூருக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.