கரண்ட் ஷாக் கொடுத்து அடித்தார்கள்.. போலீஸ் டார்ச்சர் குறித்து பள்ளி கண்டெக்டர் வாக்குமூலம்
டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளியில் நடந்த கொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பள்ளி பஸ் கண்டெக்டர் போலீஸ் டார்ச்சர் குறித்து விளக்கி இருக்கிறார்.
டெல்லி: இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். கழுத்தறுக்கப்பட்டு மரணம் அடைந்த அந்த சிறுவனின் பெயர் பிரத்தியுமான் தாக்குர்.
தனியார் பள்ளியில் நடந்த இந்த கொலையில் முதலில் அந்த பள்ளியின் பஸ் கண்டெக்டர் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த கொலையை செய்தது அதே பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் என சிபிஐ மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் போலீசால் பொய் வழக்கில் சிறை சென்ற பஸ் கண்டெக்டர் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசி இருக்கிறார். மேலும் போலீசின் டார்ச்சர் குறித்தும் பேசியுள்ளார்.
பள்ளி மாணவன் கொலை
டெல்லியின் குர்கான் பகுதியில் இருக்கும் ரேயான் இண்டர்நேஷனல் பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரத்தியுமான் தாக்குர் என்ற மாணவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். இதையடுத்து போலீசார் அந்த கொலை குறித்து விசாரணை செய்தனர். முதலில் அந்த பள்ளியின் கண்டெக்டர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். இவர் போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டு பல நாட்கள் விசாரிக்கப்பட்டார்.
வழக்கில் திருப்பம்
அதன்பின் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த கொலைக்கு காரணம் என அதே பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான். மேலும் இந்த கொலை சம்பவத்தில் அந்த பள்ளியின் கண்டெக்டருக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லை என சிபிஐ கூறியது. போலீஸ் வேண்டுமென்றே வழக்கை ஜோடித்ததாக கூறியது. சிபிஐ நடத்திய விசாரணையில் கொலை செய்த 11ம் வகுப்பு மாணவன் தனது கொலையை ஒப்புக் கொண்டான்.
பெயிலில் வந்த கண்டெக்டர்
இந்த நிலையில் பொய் வழக்கில் சிறை சென்ற கண்டெக்டர் 72 நாட்களுக்கு பின் வீடு திரும்பி இருக்கிறார். இவர் தன் மீது பொய் வழக்கு போட்ட ஹரியானா போலீஸ் மீது வழக்க தொடுக்க இருப்பதாக கூறியிருக்கிறார். இவருக்கு ஆதரவாக அவரது ஊர் மக்கள் ஒன்று கூடி இருக்கின்றனர். மேலும் அவரது ஊர் மக்கள் இவருக்காக 50,000 ரூபாய் நிதி திரட்டி கொடுத்து இருக்கின்றனர்.
போலீஸ் செய்த டார்ச்சர்
தற்போது அவர் போலீஸ் செய்த டார்ச்சர் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் '' போலீஸ் என்னை ஒருநாள் கூட தூங்கவிடவில்லை. தலைகீழாக கட்டி கரெண்ட் ஷாக் கொடுத்தார்கள். மேலும் போதை பொருள் கொடுத்து இரவு முழுக்க உடலில் கீறி கொடுமை செய்தார்கள். தினமும் ஆள் மாற்றி ஆள் அடித்து செய்யாத தவறை ஒப்புக் கொள்ள சொன்னார்கள்'' என்று கூறியுள்ளார்.