டெல்லியில் காற்று மாசு... மக்கள் பாதிப்பு- தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை
டெல்லி: டெல்லியில் காற்று மாசு காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தொடக்கப்பள்ளிகளுக்கு துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விடுமுறை அறிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசடைந்துள்ளது. மேலும் கார்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளதால் காற்று மாசுபடுவதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதனால் கார்களின் பதிவு எண்களின் கூட்டுத் தொகை இரட்டை படையாக இருந்தால் ஒரு நாளும், ஒற்றை படையாக இருந்தால் மற்றொரு நாளும் இயக்க உத்தரவிடப்பட்டது. உலகிலேயே மாசான நகரங்களின் பட்டியலில் டெல்லி முன்னிலை வகித்துள்ளது. காற்று மாசு நிகழ்வானது ஆண்டுதோறும் தீவிரமடைகிறது.
மாசின் அளவு
இதையடுத்து காற்று மாசு ஓரளவு குறைந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது காற்று மாசின் அளவு 451-ஆக உள்ளது. அதிகபட்ச அளவு 500 ஆகும். மாசின் அளவு 100-க்கு மேல் இருந்தாலே அது உடல்நிலைக்கு ஏற்றதல்ல என்று கூறப்படுகிறது.
புகைமூட்டம்
இந்நிலையில் இன்று காற்று மாசு கடுமையாக இருந்ததால் நகரமே புகைமூட்டமாக இருந்தது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் மக்கள் அவதிப்பட்டனர். மேலும் இந்த மாசான காற்றை சுவாசித்ததால் மூக்கு மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டது.
குழந்தைகளை வெளியே அனுப்பாதீர்
இதனால் டெல்லி நகரம் வாயுக்களின் நகரம் என்று குறிப்பிட்டு இன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளையும், வயதானவர்களையும் வெளியே அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்கிங் வேண்டாம்
இதுகுறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், காற்று மாசு அதிகமாக உள்ளதால் அதிகாலை நடைப்பயிற்சியை மக்கள் தவிர்க்க வேண்டும். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றார் அவர்.