டெல்லி: 10ம் வகுப்பு மாணவி 5 பேர் கொண்ட கும்பலால் துப்பாக்கி முனையில் பலாத்காரம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் பத்தாம் வகுப்பு மாணவியை துப்பாக்கி முனையில் 5 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி உத்தம் நகர் பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த வாரம் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது.
துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற கும்பல் சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு அதை செல்போனிலும் படம்பிடித்துக்கொண்டனர். சிறுமியை அதே இடத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
அந்தப் பக்கமாக சென்ற சிலர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
5 குற்றவாளிகளில் இருவர் சிறுவர்கள் என்று பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றவாளிகளை தீவிரமாக தேடிய போலீசார் மூவரை கைது செய்துள்ளனர். தப்பியோடிய இருவரை தேடிவருகின்றனர்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
உத்தரபிரதேசத்தில் தலித் சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.