அழுக்கு உடையில் வந்ததால்... ஏழைக் குழந்தைகளை விரட்டியடித்த இரக்கமற்ற டெல்லி ஹோட்டல்!
டெல்லி: டெல்லியில் உள்ள சிவ் சாகர் உணவகத்திற்கு பெண் ஒருவர் ஏழைக் குழந்தைகளை அழைத்து வந்தபோது அவர்களை ஹோட்டல் உரிமையாளர் வெளியே விரட்டிவிட்டுள்ளார்.
டேராடூனை சேர்ந்தவர் சோனாலி ஷெட்டி. அவர் வார இறுதி நாட்களில் டெல்லிக்கு வந்துள்ளார். தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாட அவர் ஏழைக் குழந்தைகளுக்கு உணவளிக்க முடிவு செய்தார்.
இதையடுத்து அவர் சில ஏழைக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள சிவ் சாகர் உணவகத்திற்கு சென்றார். உணவகத்திற்குள் நுழைந்த அவர்களை உரிமையாளர் விரட்டிவிட்டுள்ளார்.
The owner discriminated with kids & refused service citing that kids aren't well dressed & look dirty: Sonali Shetty pic.twitter.com/qbwaNgb5ii
— ANI (@ANI_news) June 11, 2016
குழந்தைகள் அழுக்கான உடை அணிந்து பார்க்க அழுக்காக இருப்பதாக தெரிவித்து அவர்களை வெளியே விரட்டிவிட்டதாக சோனாலி தெரிவித்தார். இதையடுத்து வேறு இடத்தில் குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்த அவர் மீண்டும் சிவ் சாகர் உணவகத்திற்கு வந்தார்.
உணவகத்தில் இருந்து குழந்தைகள் விரட்டியடிக்கப்பட்டதை கண்டித்து அவர் 10 மணிநேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து அவர் போலீசிலும் புகார் அளித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து டெல்லி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நடந்த சம்பவம் உண்மை என்ற பட்சத்தில் அந்த உணவகம் மீது நடவடிக்கை எடுப்பதுடன், உரிமம் ரத்து செய்யப்படும் என டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.