எருமைக் கன்றுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற 6 பேருக்கு அடி உதை... டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்
டெல்லியில் எருமைக் கன்றுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற 6 பேரை அடித்து உதைத்து துன்புறுத்திய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: எருமைக் கன்றுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றவர்களை உதைத்து துன்புறுத்திய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாக்கப்பட்டவர்களில் ஒருவரின் மகன் அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார், "நேற்று இரவு சலீம், அலி ஜான், சவுகென், தில்சன், சைப் அலி, காலா ஆகியோர் கிழக்கு டெல்லியின் காசியாபூர் வழியாக வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, பாபா ஹரிதாஸ் நகர் அருகே ஒரு கும்பல் அந்த வாகனத்தைச் சுற்றி வளைத்துள்ளது. அந்த கும்பல் வாகனத்தில் இருந்த 6 பேரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில், அவர்கள் காயமடைந்துள்ளனர். தாக்குதல் குறித்து தொலைபேசியில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்றபோது வாகனத்தில் இருந்தவர்கள் காயமடைந்திருந்தனர். அவர்கள் சென்ற வாகனமும் சூறையாடப்பட்டிருந்தது.
காயமடைந்தவர்கள் அனைவரும் ராவ் துலாராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் அலி ஜான் மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளனர்.