டெல்லியில் ரூ. 8 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. 3 பேர் கைது
டெல்லி: டெல்லியில், துப்பாக்கி முனையில் ரூ. 8 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள மூ்ல்சந்த் பாலத்திற்கு அருகே கடந்த செவ்வாய்க்கிழமையன்று பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் காரில் வந்தவர்களிடமிருந்து ரூ. 8 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பெண் ஐபிஎல் சூதாட்டக் கும்பல்களுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. சம்பந்தப்பட்ட காரில் இருந்த நபர் பெயர் ராஜேஷ் கல்ரா. இவர் ஒரு தொழிலதிபர். ஆனால் இவருக்கு பெட்டிங் புக்கி என்ற இன்னொரு முகமும் உள்ளது.
ஹன்சி குரோனி சூதாட்ட சம்பவத்திலும் இவருக்குத் தொடர்பு இருந்து பல வருடங்களுக்கு முன்பு விசாரிக்கப்பட்டவர். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது பல புக்கிகளுக்கு பெட் கட்டியப் பணத்தை இவர் தராமல் இழுத்தடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட புக்கிகள் சேர்ந்துதான் இந்த கொள்ளையை நடத்தியிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
மேலும் கொள்ளை போனது ரூ. 20 கோடி வரை இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஹரியானாவைச் சேர்ந்த 3 பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். ஹரியானாவைச் சேர்ந்த கும்பல்தான் இந்தக் கொள்ளைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கும்பலைச் சேர்ந்த மற்றவர்களையும் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது.