டெல்லியில் போக்குவரத்து நெரிசல்: நடுரோட்டில் பஸ், ஆட்டோவில் பிரசவித்த பெண்கள்
டெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று மாலையில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலால் நடுரோட்டில் 2 பெண்கள் குழந்தை பெற்று கொண்டுள்ள அவலநிலை அரங்கேறியுள்ளது.
இந்திய-ஆப்பிரிக்க மாநாடு நடைபெற்றதன் காரணமாக டெல்லியில் கடந்த சில நாட்களாகவே பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை, தென் கிழக்கு டெல்லியின் ‘சரை காலே கான்' பகுதியில் உள்ள அரசு பேருந்தில் பிரசவ வலியுடன் பல மணி நேரம் காத்திருந்த ரேகா, 20 என்ற கர்ப்பிணியின் பனிக்குடம் திடீரென உடைந்தது.
உடனடியாக பேருந்து நடத்துனர் இது பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பெண் போலீசார் உதவிக்கு வந்தனர். ரேகாவின் வலி தாங்க முடியாத துடிப்பு அங்கிருந்தவர்கள் அனைவரையும் கதி கலங்க செய்தது.
ரேகா பிரசவ வலியால் அலறி துடித்த நிலையில் பேருந்தின் உள்ளேயே ரேகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவம் நல்லபடியாக முடிந்த நிலையில், போக்குவரத்து சரிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரேகாவுக்கு தொப்புள் கொடி அறுக்கப்பட்டது. ஒரு வகையில் ரேகா அதிர்ஷ்டம் செய்தவர். பிரசவ வலியில் கால்களை வெறி பிடித்தபடி உதைக்கும் வசதியுள்ள பேருந்தில் அவரது பிரசவம் நடந்தது. ஆனால் கிழக்கு டெல்லியின் ‘கஜோரி சவுக்' பகுதியில் போக்குவரத்தில் சிக்கிக் கொண்ட ரோஷினிக்கோ, 28 என்ற கர்ப்பிணி பெண், பிரசவ வலியால் துடித்துள்ளார். ஆனால் அவர் ஆட்டோவில் வந்ததால் தனது உடலை அசைக்க வழியில்லாமல் பெரிதும் தவித்துள்ளார்.
மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் பிரசவ வலி தாங்க முடியாமல் தவித்த ரோஷினிக்கோவுக்கும் ஆட்டோவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் ஒருவழியாக போக்குவரத்து நெரிசலில் இருந்து மீண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு 35 தையல்கள் போடப்பட்டு உள்ளது.
நடுரோட்டில் கடுமையான சிரமத்திற்கு இடையே குழந்தை பெற்றவர் தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த கர்பிணிகள் குழந்தையை பிரசவித்து விட்டனர். இதுவே இதயநோயாளிகள் சிக்கியிருந்தால் அவர்களின் நிலை பரிதாபம்தான்.