ஃபேஸ்புக்கில் மீட்டிங்… அப்புறம் டேட்டிங்: கொன்று பார்க்கில் புதைத்த காதலன்
டெல்லி: ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி, காதலாகி கனிந்து... சந்தித்த காதலியை கொன்று பூங்காவில் புதைத்து விட்டான் ஒரு படுபாதக காதலன்.
மேற்கு டெல்லியில் உள்ள லஜ்வந்தி கார்டன் பூங்கா பகுதியில் ஒரு பெண்ணின் உடல் கிடந்தது. உடலைக் கைப்பற்றிய போலீஸார் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார் அப்பெண்ணின் காதலரைக் கைது செய்துள்ளனர்.
கைதான நபரின் பெயர் ரோத்தாஸ் (24). உ.பி. மாநிலம் ராம்பூரைச் சேர்ந்தவர்.
இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் 20 வயதான அந்தப் பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். ஆனால் அப்பெண் சமீப காலமாக ரோத்தாஸை கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரோத்தாஸ், அப்பெண்ணை விஜய் என்கிளேவ் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு படம் பார்க்கப் போகலாம் வா என்று கூறி அழைத்துள்ளார். அப்பெண்ணும் வந்தார். வந்த இடத்தில் காதலியை கழுத்தை நெறித்துக் கொலை செய்து விட்டார் ரோத்தாஸ்.
போலீஸில் சிக்கி விடுவோம் என்று பயந்து போன ரோத்தாஸ், தனது காதலியின் உடலை பத்து கிலோமீட்டர் தூரம் தள்ளியுள்ள பூங்காவில் கொண்டு போய் வீசி விட்டு வந்து விட்டார். சுடிதாரின் துப்பாட்டாவினால் அந்த பெண்ணின் சடலம் கட்டப்பட்டிருந்தது.
ஜனவரி 12ஆம் தேதியன்று பூங்காவில் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள டெல்லி மேற்கு துணை ஆணையர் புஷ்பேந்திர குமார், உடலைக் கைப்பற்றி கொலை வழக்காக பதிவு செய்து மாயாபுரி போலீசார் விசாரணை நடத்தினர்.
ஜனவரி 11ஆம் தேதி தனது மகள் மாயமானதாக அவளது பெற்றோர் தெரிவித்தனர். கடைசியாக ரோத்தாஸ் என்ற பெயருடைய செல்போனுக்குதான் பேசியதை போலீசார் கண்டறிந்தனர்.
இதனையடுத்து ரோத்தாஸ் போலீஸ் வளையத்துக்குள் வந்தான். போலீசார் தன்னை மோப்பம் பிடித்து விட்டதை உணர்ந்த ரோத்தாஸ் தனது தாயாருடன் டெல்லியில் இருந்து ராம்பூருக்கு தப்பி ஓடினான். ஆனாலும் அவனை விடாமல் துரத்திய போலீசார் ஜனவரி 16ஆம் தேதி ராம்பூரில் கைது செய்தனர்
ரோத்தாஸிடம் விசாரணை நடத்தியபோது, பேஸ்புக் மூலம் இப்பெண் தனக்கு அறிமுகமானார் என்றும் கடந்த ஒன்றரை வருடமாக பழகி வந்ததாகவும் கூறினார்.
ஃபேஸ்புக் மூலம் நட்பாக பழகி, பின்னர் காதலித்து, செல்போன் நம்பர்களை பரிமாறி, டேட்டிங் சென்று கொன்று புதைத்து விட்டான் ரோத்தாஸ்.எனவே ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் நெருக்கம் காட்டவேண்டாம் என்று எச்சரித்துள்ளனர் போலீசார்.