காவிரியில் வெள்ளம் வந்தும் கடைமடை வராத தண்ணீர்.. அரசு அலட்சியம்.. கடலில் கலக்கும் நீர்!
காவிரியிலிருந்து அதிக அளவு தண்ணீர் வந்தாலும் கூட இன்னும் டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட சென்று சேரவில்லை.
பெங்களூர்: காவிரியிலிருந்து அதிக அளவு தண்ணீர் வந்தாலும் கூட இன்னும் டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட சென்று சேரவில்லை. இதனால் குருவை சாகுபடி செய்ய காத்திருந்த விவசாயிகள் பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்திற்கு நீர்திறப்பு மீண்டும் அதிகமாகி உள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 2.10 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் திருச்சி கல்லணைக்கும் கொள்ளிடம் அணைக்கும் தண்ணீர் அதிகமாக வருகிறது.
25 நாட்கள்
காவிரியில் சரியாக 31 நாட்களுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இன்னும் ஒரு சொட்டு தண்ணீர் கூட திருச்சியை தாண்டி கடைமடை பகுதிகளுக்கு வரவில்லை. இரண்டு முறை மேட்டூர் அணை நிரம்பி, முழுவதுமாக வெளியேற்றப்பட்டாலும் இது வரை தண்ணீர் தலைஞாயிறு, பஞ்சநதிக்குளம், நாலாம் சேத்தி உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு வரவே இல்லை. இதனால் விவசாயிகள் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்
500 ஏரிகள் குளம் நிரம்பவில்லை
காவிரியில் வெள்ளம் வந்து, தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனாலும் கூட, இதுவரை ஒரு துளி நீர் கூட கடைமடை பகுதிக்கு வரவில்லை. இதனால் 500க்கும் அதிகமான ஏரிகள், குளங்கள் நிரம்பவில்லை என்று கடைமடை பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். அதேபோல் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை .
கல்லணைக்கு குறைவுதான்
இவ்வளவு தண்ணீர் வந்தும் கடைமடைக்கு தண்ணீர் வராததற்கு நிறைய காரணம் சொல்லப்படுகிறது. காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து பின்னர் அங்கிருந்து திறக்கப்பட்டு திருச்சி வழியாக முக்கொம்பு வரும். பின்னர் அங்கிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கும், கொள்ளிடத்திற்கும் செல்லும். கல்லணையில் இருந்து மிக மிக குறைவான அளவில்தான் கடைமடை நோக்கி தண்ணீர் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதே இல்லை.
தேவையில்லாமல் கொள்ளிடம் செல்கிறது
ஆனால் கொள்ளிடத்திற்கு மிகவும் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீர் மக்களுக்கு எந்த வகையிலும் உதவாது. இந்த தண்ணீர் அப்படியே கடலுக்கு செல்கிறது. இதனால் கடைமடைக்கு வரவேண்டிய தண்ணீர் அப்படியே கடலுக்கு சென்று வீணாகிறது. காவிரி ஆற்றில் அதிக அளவில் நீர்வரத்து உள்ள காலங்களில் எல்லாமும் பாதுகாப்பு கருதி கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.
தமிழக அரசு தூர்வாரவில்லை
தமிழக அரசு வழக்கில் சிறப்பாக வாதாடினாலும், வேறு ஒரு முக்கிய தவறை செய்துள்ளது. எங்கும், காவேரியின் எந்த பகுதியிலும் தமிழக அரசு ஆறை தூர்வாரவில்லை. எந்த எரியும், எந்த குளமும், எந்த கண்மாயும் தூர் வாரப்படவில்ல. இப்போதுதான் ஆறுகள் தூர்வாரும் பணியை தமிழக அரசு தொடங்கி உள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இந்த பணியை கவனித்து வருகிறார்கள். தண்ணீர் கடைமடைக்கு செல்லாததற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.
ஆகாயத்தாமரைகள்
அதேபோல், எந்த ஆற்று பகுதியிலும் இதுவரை ஆகாயத்தாமரைகள் நீக்கப்படவில்லை. திருச்சி தாண்டிவிட்டால், ஆறுகளில் ஆகாயத்தாமரை பிரச்சனை மிகவும் அதிகம். இதனால் நீர் வரத்து மொத்தமாக நின்று போகும். இதனால், தற்போது காவிரியில் பல லட்சம் கன அடி நீர் தேவையில்லாமல் மெதுவாக சென்று வீணாகிறது.
7 ஆண்டுகளாக குருவை சாகுபடி இல்லை
டெல்டாவின் கடைமடை பகுதியில் ஏழு ஆண்டுகளாக கொஞ்சம் கூட குருவை சாகுபடி இல்லை. இதனால் ஏற்கனவே பல கண்மாய்கள் காணாமல் போய்விட்டது. இதனால் பல பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டு இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.