ஜல்லிக்கட்டு புரட்சி கர்நாடகாவிலும் பரவியது.. 'கம்பாலா' போட்டி கேட்டு வீதிக்கு வந்த மாணவர்கள்
பெங்களூர்: கம்பாலா போட்டிகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை கர்நாடகாவில் பெரிதாக வெடித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு வெடித்ததை போன்ற புரட்சி கர்நாடகாவில் கம்பாலாவுக்காக மாணவர்கள் மத்தியில் வெடித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் நடுவே வெடித்த யுக புரட்சி உலகையே உற்று பார்க்க வைத்தது. இந்த போராட்டத்தின் வெற்றியாக ஜல்லிக்கட்டு சட்டம் அவர்களுக்கு பரிசாக கிடைத்தது.
இந்த போராட்டமும், அதன் ஒழுங்கு மற்றும் அதன் வெற்றி என்பது நாடு முழுக்க உள்ள இளைஞர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவிலும்
இதேபோல தங்கள் மாநில நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காக இளைஞர்கள் வீதிக்கு வர ஆரம்பித்துள்ளனர். கர்நாடகா இப்போது இதில் லேட்டஸ்டாக இணைந்துள்ளது. இம்மாநிலத்தில் விலங்கு நல அமைப்புகளால் தடைக்கு உள்ளாகியுள்ள கம்பாலா எனப்படும், எருமை மாடு விரட்டும் போட்டிக்கு அனுமதி கேட்டு மாநிலம் முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளன.
கல்லூரி மாணவர்கள்
மங்களூரில் கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று ஒன்று கூடி நடத்திய போராட்டம் நகரத்தையே அதிர வைத்துள்ளது. ஹூப்ளியில் மாடுகளுடன் போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மாநிலம் முழுக்க போராட்டம்
வடக்கே ஹூப்ளி முதல் தெற்கே பெங்களூரு வரை கம்பாலா போட்டிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் வலுத்துள்ளன. சேறும் சகதியுமான இடத்தில் எருமை மாடுகளை விரட்டிச் சென்று பின்னால் வீரர்கள் ஓடுவதுதான் கம்பாலா போட்டியாகும். அறுவடை காலங்களில் விவசாயிகள் இப்படி மாடுகளோடு ஓடிச் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதை தடுத்துவிட்டன பீட்டா போன்ற அமைப்புகள்.
சித்தராமையா உறுதி
இந்தநிலையில், மங்களூரில் இன்று நடைபெற்ற மாணவர் போராட்டத்தின்போது பீட்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விண்ணை முட்டிய கோஷமாக மாறியது. தமிழகத்தில் எழுந்த பீட்டாவுக்கான எதிர்ப்பு இப்போது கர்நாடகாவுக்கும் பரவியுள்ளது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, கிராமப்புற விளையாட்டான கம்பாலாவை காப்பாற்ற சட்டம் கொண்டுவரவும் மாநில அரசு தயாராக உள்ளது என்றார்.