ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு தேவை.. மோடிக்கு 1000 நாப்கின்கள் அனுப்ப ம.பி. மாணவிகள் முடிவு
ஜிஎஸ்டி வரி இன்றி நாப்கினை வழங்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு ஆயிரம் நாப்கின்களை அனுப்ப பெண்கள் திட்டமிட்டுள்ளனர்
Recommended Video
மத்திய பிரதேசம்: நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரி வசூலை நீக்கவும், இலவசமாக நாப்கினை வழங்க வலியுறுத்தியும், பிரதமர் மோடிக்கு ஆயிரம் நாப்கின்களை அனுப்ப பெண்கள் திட்டமிட்டுள்ளனர்
ஜிஎஸ்டியில் சொகுசு பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட நாப்கினுக்கு 12 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. பெண்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவைப்படும் நாப்கின்களை நியாயப்படி இலவசமாக வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பெண்களின் நலனில் அக்கறைக்கொண்ட அரசு தான் மேம்படும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ள சமூகநல அமைப்புகள், நாப்கின்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இலவச கருத்தடுப்பு சாதனங்கள்
நாடு முழுவதும் அரசு சார்பாக பல இலவச பொருட்கள் அளித்து வரும் நிலையில் பெண்களின் நலனுக்காக நாப்கின்களை இலவசமாக அளிக்கவேண்டும் என்று கோரிக்கையும் பலமாக ஒலித்து வருகிறது. கருத்தடுப்பு சாதனங்களும், ஆணுறைகளும் இலவசமாக வழங்கப்படும் போது ஏன் நாப்கின்களை இலவசமாக அளிக்க கூடாது என என்று மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக அமைப்பு ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த அமைப்புகள்
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூகநல அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்களும், மாணவிகளும் நாப்கினுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் களமிறங்கியுள்ளனர். இதனை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் போல நடத்தி வரும் அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
களத்தில் இறங்கிய மாணவிகள்
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் மாணவிகளும் இந்த கையெழுத்து இயக்கத்தில் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு, நாப்கினின் முக்கியத்துவம் குறித்து சக மாணவிகளுக்கும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தங்களின் கருத்துகளை வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
|
மோடிக்கு பார்சல்
தங்களின் கருத்தை வலியுறுத்தி வரும் மார்ச் 3ம் தேதி பிரதமர் மோடிக்கு ஆயிரம் நாப்கின்களை அனுப்பவும் மாணவிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பல்வேறு சமூக அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்கள் அமைப்புகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்
உடல்ரீதியான பிரச்சனைகள்
அந்த நாப்கினில் பெண்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளையும், வலிகளையும், கருத்துகளையும் விரிவாக எழுதி அனுப்பும்படியும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தை நாடு தழுவிய போராட்டமாக மாற்ற வேண்டும் என்றும் சமூகநல அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு சமூக ஆர்வலர்கள் பலர் ஏராளமான நாப்கின்களை நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். நாப்கின்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.