ஆம் ஆத்மி செயற்குழுவில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை: பூஷண், யோகேந்திர யாதவ் சாடல்!!
டெல்லி: ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுவில் இருந்து தங்களை நீக்கியது ஜனநாயகப் படுகொலை என்று பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் சாடியுள்ளனர்.
டெல்லியில் இன்று நடைபெற்ற ஆம்ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டனர். இவர்களுடன் யோகேந்திர யாதவ் ஆதரவாளர்களான ஆனந்த குமார், அஜித்ஷா ஆகியோரும் நீக்கப்பட்டனர்.
இதனால் ஆவேசம் அடைந்த யோகேந்திர யாதவும், பிரசாந்த் பூஷணும் கூட்டத்தை விட்டு வெளியேறினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் யோகேந்திர யாதவ் கூறுகையில், தேசிய நிர்வாக குழுவில் நடந்த வாக்கெடுப்பு மோசடியானது. முன் கூட்டியே தீர்மானத்தை ரகசியமாக தயாரித்து வைத்து நிறைவேற்றியுள்ளனர்.
திட்டமிட்டு ஜனநாயகப்படுகொலை நடந்துள்ளது. ஆம்ஆத்மியில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை. எங்களை ஆதரித்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்றார்.
பிரசாந்த் பூஷண் கூறுகையில், நாங்கள் நீக்கப்பட்டது சட்ட விரோதமானது. கூட்டத்துக்கு குண்டர்களை அழைத்து வந்து எங்களது ஆதரவாளர்களை தாக்கினார்கள். இந்த கூட்டம் முழுக்க முழுக்க சட்ட விரோதமானது என்றார்.