பண மதிப்பிழப்பு மிகப்பெரிய ஊழல்.. ஏடிஎம்களுக்கு மோடி விசிட் செய்ய வேண்டும்: ப.சிதம்பரம் காட்டம்
நாக்பூர்: இந்த வருடத்தின் மிகப்பெரிய ஊழல் என்று பண மதிப்பிழப்பு உத்தரவை பற்றி முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நாக்பூரில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
ப.சிதம்பரம் கூறியது: நாட்டில் 45 கோடி மக்கள் தினக்கூலிகள். பால்க்காரர், துணி துவைப்பவர் மற்றும் விவசாயிகள், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பண மதிப்பிழப்பு என்பது யோசனையே இன்றி எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை. உலகின் அனைத்து பெரிய பொருளாதார வல்லுநர்களும், பெரிய செய்தித்தாள்களும், இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்துள்ளன. பண மதிப்பிழப்பு உத்தரவை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடியின் உரையில், கருப்பு பணத்தை ஒழிக்கப்போவதாக 24 முறை வார்த்தை இடம் பெற்றிருந்தது. ஆனால், சில நாட்கள் கழித்து அவர் பேசிய உரையில் அதே அளவுக்கு பணற்ற பொருளாதாரம் என்ற வார்த்தையே இடம் பிடித்திருந்தது.
கருப்பு பணத்தை இந்த அறிவிப்பு ஒழிக்கவில்லை என்பதை அறிந்து கொண்ட மோடி, தனது பேச்சை பண மற்ற பொருளாதாரம் என்பதை நோக்கி நகர்த்திவிட்டார். பணமற்ற டிஜிட்டல் பொருளாதாரம் என்பது நல்லதே. ஆனால், அதை அவசர கதியில் செய்ய கூடாது. இதற்கு உரிய கால அவகாசம் தர வேண்டும்.
பெரும்பாலான நகரங்களிலுள்ள மார்க்கெட் பகுதிகள் தற்போது மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் விலைவாசி குறைந்துள்ளது. இது பணம் கையில் இல்லாததால் வீழ்ச்சியடைந்த செயற்கை பண வீக்க குறைப்பாகும். இந்த நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை வீழ்ச்சியடைச் செய்துவிட்டது.
வாரத்திற்கு ரூ.24000 அளவுக்கு ரொக்கப் பணத்தை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது மத்திய அரசின் அறிவிப்பு. ஆனால் மக்களால் அந்த அளவுக்கு பணத்தை பெற முடியவில்லை. எனக்கே கூட அந்த பணம் இன்னும் கிடைக்கவில்லை. எனவே கேள்வி எழுப்ப முழு சுதந்திரம் எனக்கு உள்ளது. ஏடிஎம் மையங்களுக்கு மோடி நேரில் சென்று மக்கள் படும் கஷ்டத்தை பார்க்க வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.