பணமதிப்பிழப்பால் ரூ3.75 லட்சம் கோடி நஷ்டம்- ஒற்றை காலில் பொருளாதாரம்... யஷ்வந்த் சின்ஹா விளாசல்
பணமதிப்பிழப்பால் ரூ. 3.75 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார்.
டெல்லி: பணமதிப்பிழப்பால் ரூ.3.75 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த முறையை கடந்த 700 ஆண்டுகளுக்கு முன் துக்ளக் செய்திருந்தார் என்றும் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இது நடைபெற்று ஓராண்டு ஆன நிலையிலும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவத்துடன் பணமதிப்பிழப்பை ஒப்பிட்டு பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார். இது தொடர்பாக சின்ஹா கூறுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பேரரசர்கள், முடியரசர்கள் மற்றும் அரசர்கள் எடுத்ததாக வரலாற்றில் படித்திருக்கிறோம்.
துக்ளக் நடவடிக்கை
கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பேரரசர் இருந்தார். அவர் புதிய கரன்சியை அறிமுகப்படுத்தி பழைய கரன்சிகளுக்கு முடிவு கட்டினார். எனவே பணமதிப்பிழப்பு என்பது 700 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றது. அந்த பேரரசரின் பெயர் முகமது பின் துக்ளக். அவர் தனது தலைநகரத்தை டெல்லியிலிருந்து தௌலதாபாத்துக்கு மாற்றினார்.
74 முறை குறிப்பிட்டார் மோடி
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆர்பிஐ ஆளுநரோ அல்லது நிதி அமைச்சரோ அறிவிப்பதற்கு பதில் பிரதமர் மோடியாகவே முடிவு செய்து அதை அறிவித்ததால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
கருப்பு பணம்
கடந்த ஆண்டு பணமதிப்பிழப்புக்கு பிறகு அவர் பேசிய நீண்ட உரையில் 74 முதல் 75 முறை கருப்பு பணம் என்பதை குறிப்பிட்டார். கள்ள நோட்டுகள் மற்றும் தீவிரவாதம் பற்றி மட்டுமே குறிப்பிட்ட மோடி அதில் டிஜிட்டல் மற்றும் ரொக்கமில்லா பொருளாதாரத்தை குறித்து குறிப்பிடவில்லை.
நேர்மை இல்லை
இந்தியா திருடர்களின் நாடு என்ற கருத்து உலகம் முழுவதும் சென்றடைகிறது. சட்டவிரோத நடவடிக்கைகளில் அனைவரும் ஈடுபட்டு வருகிறோம். யாரிடமும் நேர்மை இல்லை.
ஒற்றை காலில் பொருளாதாரம்
பணமதிப்பிழப்பால் நாட்டுக்கு ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நமது நாட்டின் பொருளாதாரமும் ஒற்றை காலில் நின்று கொண்டிருக்கிறது என்றார்.