என்ன கொடுமை.. பணமதிப்பிழப்புக்கு பிறகு முன்பைவிட பண புழக்கம் அதிகரிப்பு! புள்ளி விவரத்தால் அம்பலம்
டெல்லி: பண மற்ற வர்த்தகத்தை ஊக்குவிக்க வேண்டும், கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் கூறி மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், பலன் இல்லை என்று ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திடீரென தொலைக்காட்சியில் தோன்றி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களான 500 மற்றும் 1000 செல்லுபடியாகாது என்றார்.
இதையடுத்து ஏடிஎம்களுக்கு மக்கள் நள்ளிரவிலும் ஓடிச் சென்று வரிசையில் நின்றனர்.
இரு நோக்கங்கள்
கருப்பு பணத்தை ஒழிப்பதும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தி அதன் மூலம், வர்த்தகத்தை கண்காணிப்பின்கீழ் கொண்டுவரும்தான் இதன் நோக்கம் என்று அப்போது கூறப்பட்டது. சொன்னதை போலவே பணத்திற்கு கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டது. வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முதியோர் பலரும் மயங்கி விழுந்து பலியான கொடுமைகளும் அரங்கேறின.
பொறுமையாக இருக்க சொன்னார்கள்
பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்பட்ட அவசர நிலையாகவே இது பார்க்கப்பட்டது. நாட்டுக்காக இந்த கஷ்டத்தை பொறுத்துக்கொள்ளுமாறு அரசு தரப்பு கோரியது. பாஜகவினரும் கூறினர். இப்போது பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், நிலைமை என்ன தெரியுமா?
இப்போதுதான் அதிகமாம்
பண மதிப்பிழப்பிற்கு முன்பு நாட்டில், 17.64 லட்சம் கோடி பண புழக்கம் இருந்தது. ஆனால், இப்போது அதைவிட அதிகமாக 17.97 லட்சம் கோடி பணப் புழக்கம் உள்ளதாம். புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி என்பதால், சந்தேகம் தேவையில்லை. பண பரிவர்த்தனையை குறைத்துக்கொள்ள வைக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன என்பது அம்பலமாகியுள்ளது.
கருப்பு பணம் கதி
கருப்பு பணத்தையாவது ஒழித்தார்களா என்றால், அதற்கும் அரசு தரப்பில் இதுவரை சரியான, புள்ளி விவரம் வெளியிடப்படவில்லை. இரு நோக்கங்களுமே வீணாகிவிட்ட நிலையில், பண மதிப்பிழப்பு ஏன் என்ற கேள்வி மக்களிடம் எழுகிறது. மக்களை கஷ்டப்படுத்தி ஏடிஎம்களில், வங்கிகளில் காத்திருக்க வைத்ததை தவிர இதன் தாக்கம் என்ன? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவேயில்லை.
மளமள அதிகரிப்பு
பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதும், 2017 ஜனவரி 6ம் தேதி நிலவரப்படி, நாட்டின் பண புழக்கம் ரூ.8,73,402 கோடியாக குறைந்தது. அதாவது 51 விழுக்காடு குறைந்தது. ஆனால், அதன்பிறகு விஸ்வரூபம் எடுத்துள்ள பண புழக்கம், இப்போது முன்பை காட்டிலும் அதிகரித்துள்ளது என்பது இந்த புள்ளி விவரம் சொல்லும் மற்றொரு பாடம்.