எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கியதில் இருந்தே ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு அவைகளும் தினமும் செயல்படாமல் ஒத்தி வைக்கப்படுகின்றன.
குளிர்கால கூட்டத்தொடர் முடிய இரண்டு நாட்களே உள்ளன. இருப்பினும் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று காலை மாநிலங்களவை கூடியதும் ரூபாய் நோட்டு விவகாரத்தால் மக்கள் படும் கஷ்டங்கள் குறித்து காங்கிரஸார் பேசினர்.
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதற்கிடையே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து பாஜகவினர் குரல் எழுப்பினர்.
தொடர் அமளியால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவையிலும் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.