நாடு முழுவதும் சுங்க கட்டணம் ரத்தால் ரூ.1,238 கோடி இழப்பு - பொன்.ராதாகிருஷ்ணன்
சுங்க கட்டணம் ரத்தால் ரூ.1,238 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்களில் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 1,238 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 8ம் தேதி இரவு ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் மோடி. இதையடுத்து நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு, பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
இதை தவிர்ப்பதற்காக சுங்க கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக டிசம்பர் 2ம் தேதிவரை ரத்து செய்தது மத்திய அரசு. எனவே தற்போது வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமலேயே, வேகமாக பயணிக்க முடிகிறது.
இந்த நிலையில் மக்களவையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், நவம்பர் 9 -ம் தேதி முதல் நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதனால் நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ1,238 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே மீண்டும் இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் வசூலிப்பதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.