செல்லாத ரூபாய் நோட்டு.. எதிர்க்கட்சிகள் கடும் அமளி.. நாடாளுமன்றம் 11வது நாளாக முடக்கம்
செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 11வது நாளாக நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது.
டெல்லி: விடாது கருப்பாய் தொடர்ந்து 11வது நாளாக, செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் 11வது நாளாக இன்றும் முடங்கின.
ரூபாய் நோட்டு செல்லாது என்று 8ம் தேதி பாஜக அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் கையில் பணம் இருந்தும் இல்லாத சூழல் உருவானது. வங்கி, அஞ்சலகங்கள், ஏடிஎம் மையங்கள் முன்பு பணத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது. மேலும், பணம் எடுக்க வரிசையில் நின்ற போது மாரடைப்பு, நிற்க முடியாமல் மயக்கம் அடைந்து என இதுவரை சுமார் 75 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர்ந்த தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் ரூபாய் நோட்டு செல்லாது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் போராட்டம்
ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் வெளியிலும், அவைகளுக்குள்ளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அவைக்கு வராமல் இழுத்தடிக்கும் மோடி
ரூபாய் நோட்டு செல்லாது குறித்து பிரதமர் மோடி அவைக்கு வந்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி அவைக்கு வராததால் அவை நடவடிக்கைகளை நடத்த முடியாத வகையில் எதிர்க்கட்சியின் அமளியில் ஈடுபட்டு, லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவை முடக்கி வருகின்றனர்.
லோக் சபாவில் கடும் அமளி
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கின. இதில் லோக் சபாவில் பிரதமர் மோடி அவைக்கு வந்திருந்தார். அப்போது எதிர்க்கட்சிகள் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மேலும், காஷ்மீரில் நேற்று கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினார்கள். இதனால் அவையை நடத்த முடியாத சூழல் உருவானது. இதனையடுத்து அவை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராஜ்ய சபா ஒத்தி வைப்பு
அதே போன்று ராஜ்ய சபாவிலும் எதிர்க்கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட்டனர். தங்களது இருக்கையில் இருந்து எழுந்து அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது, ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக விவாதிக்கவேண்டும் என்றும் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து ராஜ்ய சபாவும் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.