ரூபாய் நோட்டு செல்லாது… எதிர்க்கட்சிகள் அமளி.. 9வது நாளாக முடங்கிய ராஜ்ய சபா
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக விவாதிக்க மோடி அவைக்கு வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 9வது நாளாக ராஜ்ய சபா இன்றும் முடங்கியது.
டெல்லி: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க மோடி அவைக்கு வர வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜ்ய சபா நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 9வது நாளாக ராஜ்ய சபா தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.
கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என அனைத்தும் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக ராஜ்ய சபாவில் விவாதிக்க வேண்டும் என்று கோரி வருகிறது. மேலும், ராஜ்ய சபாவிற்கு பிரதமர் மோடி வந்து விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரி அமளியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு ராஜ்ய சபா தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுந்து மோடி அவைக்கு வர வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகர் குரியன் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி வந்தனர். இதனை கட்டுப்படுத்த சபாநாயகர் முயன்றார்.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து முதல் 30 மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்ட ராஜ்ய சபா பின்னர் 12 மணி வரையும் அடுத்து மதியம் 2 மணி வரையும் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 2 மணிக்கு ராஜ்ய சபா கூடியது. அப்போதும், எதிர்க்கட்சியினர் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக பல கேள்விகளை எழுப்பினார்கள். இந்தப் பிரச்சனைக்கு அரசு பதில் சொல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள், வங்கியில் உள்ள பணத்தை எடுப்பதை தடுக்க பிரதமருககு உரிமை இல்லை என்றும் கூறிய காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா, அரசியல் சட்டத்தின் 300வது பிரிவை சுட்டிக்காட்டி பேசினார். இதற்கு பதில் அளித்த சபாநாயகர் குரியன் இதற்கு அரசுதான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
இதனையடுத்து, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் குரியன் அவையை நாளை வரை ஒத்தி வைத்தார்.