ரூபாய் நோட்டு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.. போராட்ட களத்தை பீகாருக்கு மாற்றிய மம்தா
ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டதை திரும்பப் பெற வலியுறுத்தி பீகாரில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபடுகிறார்.
பாட்னா: மத்திய அரசு அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளான 500, 1000 செல்லாது என அறிவித்துள்ளதை திரும்பப் பெற வலியுறுத்தி பிீகாரில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபடுகிறார்.
இந்த தர்ணா போராட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.
தர்ணா சர்சை
ஆனால் அந்த மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இந்த தர்ணாவில் பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மம்தாவின் தர்ணாவிற்கு ஆதரவு அளிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பீகார் மாநில மெகா கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சிக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் மம்தாவின் தர்ணாவிற்கு ஆதரவு அளித்துள்ளது பிகாரில் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, மத்திய அரசு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த விவகாரத்தில் ஒவ்வொரு கட்சியும் வேவ்வேறான நிலைப்பாட்டினை கொண்டுள்ளன. அதன்படி, இந்த மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் ஒரு நிலைப்பாட்டினை எடுத்துள்ளது என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணி:
பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு வெளியான பிந்தைய கால கணக்கு விவரங்கள் வெளியிடுவதில் பலன் எதுவும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிட வேண்டும் என்றார் மம்தா.
உத்தரப் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளித்த மாநில முதலமைச்சர் அகிலேஷ்யாதவுக்கு மம்தா நன்றி தெரிவித்தார். மேலும், அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அம்மாநில மக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து டுவிட் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மம்தா எச்சரிக்கை:
முன்னதாக மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜி, ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் ஏழை-எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பிரதமர் நரேந்திர மோடி கடவுள் போன்று செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சுமத்தியிருந்தார். இந்த விவகாரத்தில் பிரதமர் இல்லத்திற்கு வேளியே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய் அல்லது செத்துமடி
மேலும் செய் அல்லது செத்துமடி என்பதற்கு இணங்க தாம் செயல்பட்டு பிரதமர் மோடியை இந்திய அரசியலில் இருந்தே விரட்டுவேன் என்றும் மம்தா சவால் விடுத்துள்ளார். இந்த பரபரப்பான சூழலில் பிகாரில் இன்று மத்திய அரசுக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட மம்தா தீர்மானித்து இருப்பது அரசியல் நோக்கர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.