ரூபாய் நோட்டு வாபஸ் ஒரு பண மோசடி.. மோடிக்கு எதிராக பாஜகவில் மேலும் ஒரு போர்க்குரல்
ரூபாய் நோட்டு வாபஸ் அரசின் பண மோசடி என முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: ரூபாய் நோட்டு வாபஸ் அரசின் பண மோசடி என பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் அதள பாதளத்துக்கு சென்று விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. உள்நாட்டு உற்பத்தியும் சரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தால் வங்கிகளுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, மோடியும், அருண் ஜேட்லியும் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். பாஜக மூத்த தலைவரே மோடி அரசு மீது குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அருண் ஷோரி விமர்சனம்
சின்ஹாவின் வெளிப்படையாக பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பாஜக முன்னாள் மத்திய அமைச்சரான அருண் ஷோரி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெரிய பண மோசடி
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் நோட்டு வாபசே பொருளாதார சரிவிற்கு காரணம் என குற்றம்சாட்டினார். அது முழுக்க முழுக்க அரசால் நடத்தப்பட்ட மிகப் பெரிய பண மோசடி என்றும் அவர் விமர்சித்தார்.
முட்டாள் தனமான யோசனை
இது ஒரு முட்டாள் தனமான யோசனை என்றும் அவர் சாடினார். இதனால் கருப்பு பணம் வைத்திருந்த ஒவ்வொருவரும் அதை வெள்ளையாக மாற்றி விட்டனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
கருப்புப்பணம் ஒழிக்கப்படவில்லை
பழைய ரூபாய் நோட்டுக்கள் 99 சதவீதம் வங்கிகளிடம் திரும்ப வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது. அப்படியானால் கருப்பு பணமும், கணக்கில் வராத பணமும் இந்த திட்டத்தால் ஒழிக்கப்படவில்லைதானே என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஜிஎஸ்டி தவறான வழிகாட்டுதல்
ஜிஎஸ்டி குறித்தும் அருண் ஷோரி விமர்சித்தார். அரசின் ஜிஎஸ்டி தவறான வழிகாட்டுதல் என்றார். கடந்த 3 மாதங்களில் 7 முறை இதன் விதிகள் திருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பயத்தால் வாய் திறக்கவில்லை
இந்த மோசமான திட்டத்தை செயல்படுத்த நள்ளிரவில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பாஜகவின் பொருளாதார கொள்கை குறித்து பலருக்கும் இதேபோன்ற கருத்துதான் உள்ளது என்ற அருண் ஷோரி அச்சத்தின் காரணமாக யாரும் வாய்திறப்பதில்லை என்றார்.