மோடி பதில் தரவேண்டும்... 5வது நாளாக ராஜ்யசபாவை முடக்கிய எதிர்கட்சிகள்- அனலடிக்கும் குளிர்கால கூட்டம்
ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா துணை தலைவர் குரியன் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். 5 வது நாளாக அவை நடவடிக்கைகள் முடங்கின.
டெல்லி: ரூபாய் நோட்டு செல்லாத விவகாரத்தில் மோடி பதிலளிக்க கோரி எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து ராஜ்யசபா துணை தலைவர் குரியன் அவையை 5வது நாளாக இன்று ஒத்திவைத்தார்.
கடந்த 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு, 15 நாட்களாகியும் இதுவரை பணத்தட்டுப்பாடு தீரவில்லை. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் பேசிய அவர், பிரதமர் மோடி நாட்டு மக்களை வீதிக்கு கொண்டு வந்து விட்டதாக குற்றம்சாட்டினார். 90 சதவிகித மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த புதன்கிழமை தொடங்கியது. ரூபாய் நோட்டு விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ராஜ்யசபாவைப் பொருத்தவரை பிரதமர் மோடி நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாள்தோறும் இந்த விவகாரத்தை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. 5வது நாளான இன்றும் எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடிக்கு எதிராக கூச்சலிட்டனர். சபாநாயகர் இருக்கை அருகே சென்று கூச்சலிட்டனர். பதிலுக்கு பாஜக உறுப்பினர்களும் கூச்சலிட்டனர். இதனால் அவையில் அமளி துமளி ஏற்பட்டது. தொடர்ந்து கூச்சலும் குழப்பமும் நிலவவே அவர்களை சமாதானம் செய்ய முயன்றார் குரியன். ஆனால் அது முடியாமல் போகவே அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கி வருகின்றன. குளிர்காலக் கூட்டத் தொடரில் எதிர்கட்சியினர் அனலை கிளப்பி வருகின்றனர்.