ரூபாய் நோட்டு விவகாரம்.. கேரளாவில் நவ.28-ல் முழு அடைப்பு
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை கண்டித்து கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நாள் முழு அடைப்பிற்கு அழைப்புவிடுத்துள்ளது.
திருவனந்தபுரம்: ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து கேரளாவில் வரும் 28ம் தேதி முழு அடைப்பு நடத்தப்படும் என்றும் ஆளும் இடதுசாரி கூட்டணி அறிவித்துள்ளது.
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதனை கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, மத்திய அரசைக் கண்டித்து 28ம் தேதி நாடுதழுவிய போராட்டம் நடத்துவது என்று எதிர்க்கட்சிகள் கூட்டாக முடிவு செய்தன. அதன்படி வரும் திங்கள் கிழமை அன்று கண்டன நாள் அனுசரிக்கப்பட உள்ளது.
இதனையடுத்து, இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கும் கேரளாவில், வரும் 28ம் தேதி முழு அடைப்பு நடத்த ஆளும் இடதுசாரி கூட்டணி அழைப்புவிடுத்துள்ளது.
இதுகுறித்து இடதுசாரி கூட்டணியின் அமைப்பாளர் வைக்கம் விஸ்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல், அதிக மதிப்புடைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். எனவே, இதை கண்டித்து 28ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும். காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணிவரை முழு அடைப்பு நடைபெறும். வங்கிகள், பத்திரிகை, பால் வினியோகம், ஆஸ்பத்திரிகள், திருமண நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு முழு அடைப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
செல்லாத நோட்டு அறிவிப்பு என்ற போர்வையில், கேரளாவில் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டை மத்திய அரசு முடக்கி உள்ளது. இதுதொடர்பாக சந்தித்து பேசுவதற்கு கேரள அனைத்து கட்சி குழுவுக்கு பிரதமர் அனுமதி மறுத்துள்ளார். மோடி அனைத்து ஜனநாயக நெறிமுறைகளையும் மீறி வருகிறார் என்று கூறியுள்ளார்.