கட்டுக்கட்டாய் 2000 ரூபாய் நோட்டு… ஏர்போர்ட்டில் சிக்கிய நைஜிரியப் பயணி... போலீசார் விசாரணை
உரிய ஆவணங்கள் இல்லாமல் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த நைஜிரியப் பயணி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி: உரிய ஆவணங்களின்றி புதிய 2000 ரூபாய் நோட்டுக்களைக் கட்டுக் கட்டாக வைத்திருந்த நைஜிரிய பயணி ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் போலீசாரிடம் பிடிபட்டார்.
நைஜிரிய பயணி ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள கோவைக்கு நகருக்கு வர திட்டமிட்டிருந்தார். அதன்படி அவர் டெல்லி விமான நிலையத்திற்கு வந்த போது, அவரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரிடம் 53.78 லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது. இதில் 4.29 லட்சம் ரூபாயைத் தவிர மீதி தொகை முழுவதும் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களாக இருந்தன.
இதுகுறித்து விசாரித்த போது, அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரிடம் இருந்த புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்று அதிகாலை 2.35 மணி அளவில் டெல்லி விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றுதான் சென்னை விமான நிலையத்தில் 1.34 கோடி ரூபாய்க்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை போலீசார் கைப்பற்றினார்கள். மேலும் இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மறுநாளே நைஜிரியப் பயணியிடம் இருந்து சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.