'ரூபாய் நோட்டு செல்லாது' விவகாரம்.. திரிணமுல் காங்கிரஸ் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கண்டித்து நாடாளுமன்றத்தின் வெளியே திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனைக் கண்டித்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே உள்ள காந்தி சிலை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு திடீரென அறிவித்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக தினம் ஒரு அறிவிப்பை மத்திய அரசு அறிவித்து வந்தாலும் மக்களின் துயர் தீர்ந்தபாடில்லை.
இப்படி கடுமையான சூழலில்தான் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. 2வது நாளான இன்று கூட்டம் தொடங்கியதுமே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவி வருகிறது. ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அவைகளில் உள்ளே அனல் வீசிக் கொண்டிருக்கும் போது, திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள காந்தி சிலையின் முன்பு மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் குளிர் காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மமதா பானர்ஜி ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக ஜனாதிபதி மாளிகை நோக்கி சென்றார். பாஜக கூட்டணிக் கட்சியான சிவசேனா கட்சி உள்பட 13 கட்சி பிரதிகள் மமதாவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உடன் சென்றது குறிப்பிடத்தக்கது.