ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தால் மட்டும் பயங்கரவாதம் ஒழிந்துவிடுமா? உத்தவ் தாக்கரே 'பொளேர்'
ரூபாய் நோட்டு பிரச்னையில் மக்களை தேசவிரோதிகளாக சித்திரிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
மும்பை: ரூபாய் நோட்டு பிரச்னை குறித்து விமர்சிக்கும் மக்களை தேசத் துரோகிகளாகச் சித்திரிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடக் கூடாது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தால் மட்டும் பயங்கரவாதம் ஒழிந்துவிடுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் அணிதிரண்டுள்ளன.
இந்தச் சூழலில் மத்தியிலும், மகாராஷ்டிரத்திலும் பாஜக தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, மும்பையில் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போதுஅவர் கூறியதாவது:
ஏற்கனவே, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைத் திரும்பப் பெற்றதால் பயங்கரவாத நடவடிக்கைகள் வலுவிழந்துவிடும் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை அது சாத்தியமென்றால், உலக நாடுகள் அனைத்தும் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து பயங்கரவாதத்தை வேரறுத்துவிடலாமே? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் மத்திய அரசின் இந்த அறிவிப்பால், சாமானிய மக்கள் வங்கிகளுக்கு முன்பு நீண்ட வரிசையில் காத்து நின்று அவதிக்குள்ளாகின்றனர். அவர்களுக்கு தேசப்பற்றை மத்திய அரசு கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. வெகுஜன மக்களின் உழைப்பில் கிடைத்த தொகையைக் கொண்டுதான் நாட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
எனவே, ரூபாய் நோட்டு பிரச்னையை குறித்து விமர்சிப்பவர்களை தேசவிரோதிகள் என்றும், ஆதரிப்பவர்கள் தேசப்பற்றாளர்கள் என்றும் முத்திரை குத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என்றார் உத்தவ் தாக்கரே.
இதனிடையே, உத்தவ் தாக்கரேவை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மும்பையில் சந்தித்துப் பேசினார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி கடந்த வாரம் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில், மத்தியில் ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் கலந்து கொண்டது. இதனையொட்டி இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், சிவசேனாவின் முதன்மை செய்தித் தொடர்பாளர் ஹர்ஷல் பிரதான் இந்த சந்திப்பு குறித்து கூறுகையில், "தனது மகளின் திருமணத்திற்கு உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக கட்கரி வந்திருந்தார்' என்றார்.
ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து உத்தவ் தாக்கரேவின் சந்தேகங்களைப் போக்க, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
தாக்கரேவுடன் ராஜ்நாத் சிங் பேசியபோது ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்பட்ட விவகாரத்தை எதிர்த்து மம்தா நடத்திய பேரணியில் சிவசேனை கட்சி கலந்து கொண்டதற்கு பாஜகவின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.