பெங்களூரில் படுவேகமாக பரவும் டெங்கு: மக்களே, பத்திரமாக இருங்க!
பெங்களூரு: பெங்களூரில் ஏராளமானோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு வருவதால் மக்கள் கவலையில் உள்ளனர்.
பெங்களூரில் டெங்கு பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கொசுக்களை அழிக்க பெங்களூர் மாநகராட்சி ரூ.8 கோடி ஒதுக்கியும் பயனில்லாமல் உள்ளது.
மாநகராட்சி ஊழியர்களுக்கு சரியாக சம்பளம் அளிக்காததால் அவர்கள் கொசு மருந்து தெளிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஒயிட்பீல்டு பகுதியில் வேலை செய்யும் பலர் அய்யப்பா லேஅவுட் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் அய்யப்பா லேஅவுட்டில் வசிக்கும் பலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பல லேஅவுட்டுகளில் தலா 30 பேருக்காவது டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
கொசுக்களை அழிக்க மாநகராட்சி மருந்து அடிப்பது இல்லை என்று மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒயிட்பீல்டில் உள்ள கொலம்பியா ஏசியா மருத்துவமனைக்கு தினமும் காய்ச்சலுடன் வரும் 10 பேருக்காவது டெங்கு இருப்பது கண்டறியப்படுகிறது.
மக்கள் என்ன செய்ய வேண்டும்?
* டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் ஈஜிப்டி கொசு திறந்த பாத்திரங்களில் இருக்கும் தண்ணீர், தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் டப்பாக்கள், அல்லது தண்ணீர் சேரும்
பொருட்களில் இனவிருத்தி செய்யும். அதனால் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* வீடுகளில் கொசு வலை, கொசுவிரட்டி கிரீம்கள், காயில்களை பயன்படுத்தவும்.
* டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசு பகல் நேரத்தில் தான் கடிக்கும். அதனால் பகல் வேளையில் உடல் முழுவதும் மறைக்கும்படி உடை அணிய வேண்டும்.