விருந்து கொடுக்காததால் புதுமணத் தம்பதியை விவாகரத்து செய்ய வைத்த பஞ்சாயத்து
பரேலி: உத்தர பிரதேசத்தில் திருமணம் முடிந்தவுடன் விருந்து கொடுக்காததால் பஞ்சாயத்து ஆட்கள் புதுமணத் தம்பதியை வலுக்கட்டாயமாக விவாகரத்து செய்ய வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பரேலி நவாப்கஞ்ச் பிளாக்கில் உள்ளது ஹர்துவா கிபாயத்துல்லா கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழை விதவை தாய் மஜிதா. அவர் தனது 4 பிள்ளைகளுடன் அந்த கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் குடும்பத்துடன் கொல்கத்தா சென்ற இடத்தில் அவரது சகோதரரின் மகன் தஸ்லிமுக்கும், அவரது மகள் சபினாவுக்கும் குடும்பத்தார் முன்பு திருமணம் நடந்தது.
இதையடுத்து ஊர் திரும்பிய மஜிதாவை அழைத்த பஞ்சாயத்து அவர் தனது மகளை கொல்கத்தாவில் விற்றுவிட்டதாக குற்றம்சாட்டியது. மேலும் கிராமத்தினருக்கு விருந்து அளிக்க வேண்டும் இல்லை என்றால் புதுமணத் தம்பதிகளை பஞ்சாயத்து முன்பு ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
விருந்து கொடுக்க வசதி இல்லாததால் மஜிதா தனது மகளையும், மருமகனையும் ஊருக்கு வரவழைத்தார். புதுமணத் தம்பதியை அழைத்த பஞ்சாயத்து தஸ்லிமை கட்டாயப்படுத்தி சபினாவை விவாகரத்து செய்ய வைத்தது. இதற்கு மஜிதா எதிர்ப்பு தெரிவித்ததற்கு சபினாவை உள்ளூரில் யாருக்காவது திருமணம் செய்து வைக்குமாறு பஞ்சாயத்து தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.