ஓசி கறி கேட்டதற்கு மறுப்பு - கோழிகளை விஷம் கொடுத்து கொன்ற கொடூரர்கள் கைது
குவாலியர்: குடிபாய் என்ற பெண் கோழிகளை வளர்த்து வருகிறார். அந்த பெண்ணிடம் இலவசமாக கோழி கேட்டு அதற்கு மறுக்கவே, பழிவாங்கும் விதமாக அனைத்து கோழிகளையும் கழுத்தை திருகியும் விஷம் வைத்தும் கொன்றிருக்கின்றனர். கோழிகளைக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் பழிக்குப் பழி வாங்க ஆடுகளை கொல்வது, நாயை கொல்வது என வில்லத்தனம் செய்வார்கள். மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் அதே போல ஒரு வில்லத்தனம் அரங்கேறியுள்ளது.
குவாலியரில் ஜான்சி காவல் நிலைய பகுதியில் வைஷ்ணோ கோவில் அருகே வசித்து வந்த குடிபாய் என்கிற அந்தப்பெண் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். கூலி தொழில் செய்து வந்தாலும் கோழிகளை வளர்த்து முட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
அந்தப்பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுரேந்தர், சுமர் என்ற இரண்டு பேர் குடிபாயின் வீட்டிற்கு வந்து இலவசமாக கோழி கேட்டுள்ளனர். அதற்கு குடிபாய் மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு இருவரையும் திட்டி அனுப்பி விட்டார். இதில் அந்த இரண்டு பேரும் குடிபாய் மீது வன்மம் வைத்தனர். இருவரும் வேலைக்கு கிளம்பினர். சமயம் பார்த்து காத்திருந்த இருவரும் குடிபாயின் மகளிடம் கோழி கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண்ணும் மறுத்து விட்டார்.
இருவரும் வேலைக்கு போன நேரம் பார்த்து அந்த காரியத்தை செய்து முடித்தனர். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய குடிபாயும், அவரது மகளும் அங்கிருந்த கோழிகளின் நிலையைப் பார்த்து அதிர்ந்து போயினர். அத்தனை கோழிகளும் மயங்கிய நிலையில் கிடந்தன. சில கோழிகளின் கழுத்தை நசுக்கியும் கொலை செய்திருந்தனர்.
பதை பதைத்துப் போன குடிபாய், ஜான்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்திய தண்டனை சட்டம் ஐபிசி பிரிவு 429ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ரூ. 50க் மேல் விற்பனையாகும் எந்த ஒரு பறவையும் மிருகமும் கொல்லப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இதை செய்பவர் ஊனமுற்றவர்களாக இருந்தால் அவருக்கு இதில் எந்த ஒரு விதிவிலக்கும் இல்லை. அவருக்கும் இதே தண்டனை தான் என்று விசாரணை அதிகாரி கூறினார்.