கடும் பனிமூட்டம்... டெல்லியில் 20 ரயில்கள் ரத்து... 135 ரயில்கள் நேரமாற்றம்
டெல்லி: கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. 135 ரயில்களின் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டது.
டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிரும், பனி மூட்டமும் நிலவி வருகிறது. டெல்லியில் காலையில் வெகுநேரம் ஆகியும் பனி மூட்டம் களையாததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே செல்கின்றன.
பனி மூட்டம் காரணமாக ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ரயில் தண்டவாளங்களில் சிக்னல் விளக்கு எரிவது தெரியவில்லை. இதனால் ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வடக்கு ரயில்வேயில் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 135 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன
இதனால், ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், பனி மூட்டத்தினால் வட மாநிலங்களில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.