தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமையும்? மத்திய அரசிடம் ஓபிஎஸ் கேள்வி
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்று பட்ஜெட் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி : தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். பட்ஜெட் தொடர்பாக டெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
2018-19ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் வலியுறுத்துகிறார்.
இதே போன்று தமிழகத்தில் மத்திய அரசு அமைக்கப் போவதாக சொன்ன எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமையப் போகிறது என்பதை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 5 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து அரசு ஆய்வு செய்த நிலையில், இதுவரை எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்பதை அறிவிக்காமல் மவுனம் காக்கிறது அரசு.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து அரசு உடனடியாக ஒரு முடிவை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பட்ஜெட் கூட்டத்தில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.