யாகூப் மேமன் தூக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்தாரா சுப்ரீம்கோர்ட் துணை பதிவாளர்?
டெல்லி: உச்சநீதிமன்ற துணை பதிவாளர் (ஆய்வு) டாக்டர். அனுப் சுரேந்திரநாத் ராஜினாமா செய்ததற்கும் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கும் சம்மந்தம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற துணை பதிவாளராக (ஆய்வு) பதவி வகித்தவர், அனுப் சுரேந்திரநாத். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "சுப்ரீம் கோர்ட்டின் இருண்ட மணித்துளிகள்" என்று ஒரு நிலைத்தகவலை கடந்த 30ம் தேதி போட்டிருந்தார். மேலும் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.
இந்த இரு நிகழ்வுகளையும், ஒப்பிட்டு பார்த்த ஊடகங்கள் சில, மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி, யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கான உத்தரவை நள்ளிரவில் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததைதான் இருண்ட மணித்துளிகள் என அனுப் சுரேந்திரநாத் குறிப்பிட்டுள்ளார், இதன் காரணமாகவே அதிருப்தியில் ராஜினாமா செய்துள்ளார் என்று செய்தி வெளியிட்டன.
ஆங்கில பத்திரிகையொன்று, அனுப் சுரேந்திரநாத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, "ராஜினாமாவுக்கான காரணத்தை சொல்ல முடியாது" என்று தெரிவித்திருந்தார்.
Now SC Registry says Anup Surendranath didn't resign but repatriated; resignation didn't mention Yakub@IndianExpress pic.twitter.com/wakPEwfCIS
— Utkarsh Anand (@utkarsh_aanand) August 2, 2015
இந்நிலையில், உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் பின்வரும் வாசகங்கள் உள்ளன: டெல்லி சட்ட பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் பணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையின்பேரில் டாக்டர் சுரேந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரேந்திரநாத், அளித்துள்ள ராஜினாமா கடிதத்திலும், யாகூப் மேமன் குறித்த ஒரு வார்த்தையும் இடம்பெறவில்லை. தூக்கு தண்டனை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் சுரேந்திரநாத், டெல்லி பல்கலையில் அந்த ஆய்வுகளை மேற்கொள்ளவே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.