பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் ராம்ரஹீம் குற்றவாளி.. அரியானா, பஞ்சாப் மாநிலங்கள் அலர்ட்
அரியானா:பத்திரிகையாளர் ராம்சந்தர் கொலை வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் வரும் 17ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
சீக்கிய மதத்தில் ஒரு பிரிவான தேரா சச்சா சவுதாவின் தலைமை ஆசிரமம் அரியானா மாநிலம் சிர்ஸாவில் உள்ளது. அங்கு தங்கியிருந்த 2 பெண் துறவிகளை அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு அரியானவின் பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. 15 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் கடந்த 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்றும் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பல வழக்குகள் பதிவு
பாலியல் வழக்கு போன்று ராம் ரஹீம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. அதில் ஒன்று பத்திரிகையாளர் ராம்சந்தர சத்திரபதி என்வரது வழக்காகும். ஆசிரமத்தில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி பத்திரிகையில் அவர் தொடர்ந்து எழுதி வந்தார்.
பத்திரிகையில் வெளியான கட்டுரை
ஆசிரமத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்ற கிடைத்த கடிதம் ஒன்றை அப்படியே பிரசுரித்து,கட்டுரை ஒன்றையும் தமது மாலை நாளிதழ் ஒன்றில் அவர் எழுதியிருந்தார்.
கொல்லப்பட்ட பத்திரிகையாளர்
அதன் பின்னர் 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி மர்மமான முறையில் ராம்சந்தர் கொல்லப்பட்டார். உடல் முழுவதும நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்துக்கு ராம் ரஹீம் தான் காரணம் என்று அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.
சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டது
இதுதொடர்பாக, 2003ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன் பின்னர் வழக்கு 2006ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதி மன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி என அறிவிப்பு
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்பதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளதாக கூறிய நீதிமன்றம், இந்த வழக்கில் அவர் உட்பட 4 பேர் குற்றவாளிகள் என்று அறிவித்தது. வீடியோ கான்பிரன்சிங் முறையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு அளிக்கப்பட உள்ள தண்டனை விவரங்கள் வரும் 17ம் தேதி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
பெரும் கலவரம், வன்முறை
ஏற்கனவே... 2 பெண் துறவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அவரது ஆதரவாளர்கள் கடுமையான வன்முறையில் ஈடுபட்டனர். அரியானா, பஞ்சாப், டெல்லியில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது நிகழ்ந்த அந்த வன்முறையில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு
அந்த சம்பவத்தை நினைவுபடுத்தியுள்ள போலீசார், தற்போது உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக கூறியுள்ளனர். ராம் ரஹீமின் ஆசிரமம் அமைந்துள்ள சிர்சா பகுதியிலும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.