பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாமியார் ராம் ரகீம் சிங் வாழ்ந்த புல்லட் ப்ரூட் வீடு !
பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியார் ராம் ரகீம் சிங் வாழ்ந்த புல்லட் ப்ரூப் வீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர் : பாலியல் வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ள ராம் ரகீம் சிங் சாமியார் புல்லட் ப்ரூட் முறையில் கட்டப்பட்ட வீட்டில் வாழ்ந்துவந்தது தற்போது தெரியவந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த தேரா சச்சா சவுதா என்கிற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவர் சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங். பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவருக்கு சமீபத்தில் 20 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
மிகவும் ஆடம்பரமான முறையில் அமைப்பட்ட இவரது தலைமை மடமான சிர்சாவில் பலகோடிக்கணக்கான மதிப்பிலானது. இதுமட்டுமில்லாமல் இரண்டு திரைப்படங்களிலும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவரது வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், இவரது சொத்துகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகளுக்கு உத்தரவிட்டது.
இதனடிப்படையில் சிர்சாவில் உள்ள இவரது மடம் மற்றும் வீடுகளுக்குச் சென்ற அதிகாரிகள் குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்கு பலகோடிக்கணக்கான ஆடம்பரப் பொருட்கள், கார்கள்,பைக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது அவர் வாழ்ந்துவந்த வீடு குண்டுகள் துளைக்காத முறையில் வடிவமைப்பட்டிருந்த செய்தி வெளியாகி உள்ளது.
நாட்டில் மிக முக்கிய வி.வி.ஐ.பி.,களுக்கு மட்டுமே இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படும். அந்தப்பட்டியலில் இருக்கும் அளவுக்கு செல்வாக்கான சாமியாராக ராம் ரகீம் சிங் வாழ்ந்து வந்துள்ளார். மேலும், அவர் வாழ்ந்து வந்த மூன்றடுக்கு மாடி வீடும், அதில் இருக்கும் கதவு, ஜன்னல் , கண்ணாடி சாளரங்கள் கூட குண்டு துளைக்காத புல்லட் ப்ரூப் முறையில் உருவாக்கப்பட்டிருப்பது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.