கேரளாவில் மழைக்கு நடுவேயும் விறுவிறு... மாலை 6 மணிவரை 72.5% வாக்குகள் பதிவு
திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை தொடர்ந்த போதும் மாலை 6 மணி வரை விறுவிறுவென 72.5% வாக்குகள் பதிவாகி உள்ளன.
கேரளாவின் 14-வது சட்டசபைக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இம்மாநிலத்தின் மொத்தம் உள்ள 140 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
கேரளாவில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரிகள் முன்னணிக்கும் இடையே போட்டி உள்ளது. பாஜகவும் இத்தேர்தலில் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.
கேரளா தேர்தல் களத்தில் மொத்தம் 1,203 வேட்பாளர்கள் களம் கண்டனர். மொத்தம் 2.60 கோடி வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
கேரளாவின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இருந்தபோதும் காலையில் இருந்தே வாக்குச்சாவடிகளில் கூட்டம் அலைமோதியதால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
கேரளா ஆளுநர் சதாசிவம், உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, மார்க்சிஸ்ட் தலைவர் பிணராய் விஜயன், பாஜக வேட்பாளரான கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் காலை 7 மணிக்கே தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். திருவனந்தபுரத்தில் ராஜ்யசபா எம்.பி. நடிகர் சுரேஷ் கோபி வாக்களித்தார்.
கேரளாவிலும் சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்திருந்தன. இங்கு அமைதியாக தேர்தல் நடைபெற 52,000 பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கேரளாவில் காலை 9 மணிவரையிலான நிலவரப்படி 13.5% வாக்குகள் பதிவாகி இருந்தது. பின்னர் மாலை 6 மணியளவில் வாக்குப் பதிவு முடிவடைந்த போது 72.5% வாக்குகள் பதிவாகி இருந்தன.