வாய் திறக்கலைன்னா என்ன.. எங்ககிட்ட செம ஆதாரங்கள் இருக்கு.. கார்த்தி சிதம்பரம் வழக்கில் சிபிஐ வாதம்
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம், வாய் திறக்க மறுத்தாலும் கூட, அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன என்று சிபிஐ சார்பில், பட்டியாலா நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முதலீடு பெற சட்ட விரோதமாக கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவரை சிபிஐ கைது செய்துள்ளது.
பிப்ரவரி 28ம் தேதி கைது செய்யப்பட்ட அவர் டெல்லி பட்டியாலா, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
காவல் நீடிப்பு
சிபிஐ கோரிக்கையை ஏற்று, அவருக்கு மொத்தம் 4 முறை 'சிபிஐ காவல்' நீடிப்பு செய்யப்பட்டது. விசாரணை காலத்தில் கார்த்தி சிதம்பரம் வாய் திறக்கவில்லை என்று சிபிஐ குற்றம்சாட்டி வருகிறது. நேற்று மீண்டும் பட்டியாலா நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ ஆஜர்படுத்தியது. அப்போது கார்த்தி சிதம்பரத்திற்கு மார்ச் 24 வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஆதாரங்கள் உள்ளன
சிபிஐ தனது வாதத்தில், கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து மவுனம் காப்பதாகவும், விசாரணையில் கேள்விகளுக்கு அவர் நழுவுவதாகவும், இருப்பினும் இவ்வழக்கில் அவருக்கு எதிராக போதிய அளவுக்கு ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் கூறியுள்ளது.
நீதிமன்ற காவல்
முக்கியமான பொருளாதார குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு எதிராக போதிய அளவுகு்கு ஆதாரம் இருப்பதால் அவரை நீதிமன்ற காவலில் வைப்பது அவசியப்படுகிறது என்று சிபிஐ தனதுவாதத்தில் குறிப்பிட்டது.
வீட்டு சாப்பாடு
இதனிடையே கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞரோ, தங்கள் ஜாமீன் மனுவையும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். அதை வரும் 15ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். கார்த்தி சிதம்பரம் தனக்கு தனி சிறை ஒதுக்கப்பட வேண்டும் என்றும், வீட்டு சாப்பாடு வேண்டும் என்றும் முன் வைத்த கோரிக்கைகளை நீதிபதி ஏற்கவில்லை.