பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்...: ஊடகங்கள் பெரிது படுத்தி விட்டன: நீதிபதி கங்குலி
2012ம் ஆண்டு இறுதியாண்டு சட்டம் படித்தபோது, பயிற்சிக்காக டெல்லி சென்றிருந்த தன்னிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தவறாக நடந்து கொண்டதாகவும், இதேபோல் மேலும் 3 பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும் பெண் வழக்கறிஞர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். ஆனால், ஓய்வு பெற்ற அந்த நீதிபதியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய மூன்று நீதிபதிகள் கொண்ட குழு, குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியின் பெயர் ஏ.கே.கங்குலி என்று கண்டுபிடித்து வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதியான கங்குலி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏ.கே. கங்குலி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘நான் ஏதோ குற்றம் நிரூபிக்கப்பட்ட கைதியைப்போல் ஊடகங்கள் சித்தரிக்கின்றன. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என் மீதான புகார்களில் ஆதாரமே இல்லை. அப்பட்டமான பொய்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பாலியல் குற்றச்சாட்டுக் காரணமாக மேற்கு வங்க மனித உரிமைகள் கமிட்டித் தலைவராக உள்ள கங்குலியை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பா.ஜனதா, காங்கிரஸ் மத்திய அமைச்சர் கபில் சிபல், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் உட்பட அனைவரும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.
ஆனால், இந்தப் பொய்க்குற்றச்சாட்டிற்காக தனது பதவியை ராஜினாமா செய்ய இயலாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் நீதிபதி கங்குலி.