சுப்ரீம் கோர்ட், தீர்ப்பாயம் உத்தரவிட்டாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது: வாட்டாள் நாகராஜ்
பெங்களூர்: காவிரியிலிருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து, தமிழக- கர்நாடகா எல்லையை மூடும் போராட்டத்தை அறிவித்திருந்தார் வாட்டாள் நாகராஜ். இதையடுத்து எல்லை பகுதியான அத்திபெலேவுக்கு தொண்டர்களுடன் புறப்பட்ட நாகராஜ், அங்கு போராட்டத்தை தொடங்கினார்.
பெங்களூர் நகரம் முழுக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதை போலவே அத்திபெலேயிலும் தடையுத்தரவு தற்போது அமலில் உள்ளது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட பிறகு நிருபர்களிடம், வாட்டாள் நாகராஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கர்நாடகாவில் மொத்தமே, 27 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. காவிரி விவகாரத்தில், ஜெயலலிதா அரசியல் செய்கிறார். மிக மோசமான அரசியல் செய்கிறார். தமிழக அரசியல் தலைவர்களும், மோசமான அரசியல் செய்கிறார்கள்.
தீர்ப்பு கொடுத்தாலும் முடியாது
உச்சநீதிமன்றம், தீர்ப்பாயம் என யார் தீர்ப்பு கொடுத்தாலும், தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க முடியாது. அந்த நிலையில் உள்ளோம். மொத்த ஒட்டுமொத்த கர்நாடக மக்களை சிறையிலிட்டாலும், தமிழகத்திற்கு தண்ணீர் விட முடியாது.
மவுனம் கலைய வேண்டும்
காவிரி விவகாரத்தில், பிரதமர் மோடி தலையிட வேண்டும். பிரதமர் மவுனமாக இருக்க முடியாது. பிரதமர் மோடி, இந்த விஷயத்தில், ஜெயலலிதா சார்பாக உள்ளார். இதை ஏற்க முடியாது.
பேச்சுவார்த்தை
மோடி கர்நாடகா ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதாவது, இந்த நாட்டின் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தமிழகம் மற்றும் கர்நாடக முதல்வர்களை அழைத்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
எம்.பிக்கள் ராஜினாமா
தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கும் நிலையில் கர்நாடகா இல்லை. இதுகுறித்து பிரதமரிடம், கர்நாடக எம்.பிக்கள் பேச வேண்டும். இல்லாவிட்டால் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் இந்த விஷயத்தில் தலையிடாவிட்டால் மோடி, கர்நாடகா வரும்போது எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.
மாலையில் விடுதலை
தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராகவும் பேசியபோதும், வாட்டாள் நாகராஜ் மீது கர்நாடக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சட்ட விரோதமாக கூட்டம் கூட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ள வாட்டாள் மாலையில் விடுதலை செய்யப்படுவார்.