சிலைகளை சேதப்படுத்தும் பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை பாயும்: அமித்ஷா
டெல்லி: சிலை உடைப்பு சம்பவங்கள் துரதிருஷ்டவசமானவை என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தொடர் டுவிட்டுகளில் கூறியுள்ளதாவது:
பாஜக கட்சியை பொறுத்தளவில் யாருடைய சிலையையும் வீழ்த்துவதற்கு ஆதரவு கிடையாது. மக்களின் வாழ்க்கைத்தரத்தை மாற்றுவதே நமது முக்கிய எண்ணம்.
தமிழகம் மற்றும் திரிபுராவிலுள்ள பாஜக கட்சி தலைவர்களிடம் நான் பேசியுள்ளேன். சிலைகளை சேதப்படுத்துவோர் எங்கள் கட்சியினராக இருந்தால், பாஜகவால் கடும் கட்சிரீதியான நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்.
I have spoken to the party units in both Tamil Nadu and Tripura. Any person associated with the BJP found to be involved with destroying any statue will face severe action from the party.
— Amit Shah (@AmitShah) March 7, 2018
புதிய இந்தியாவை உருவாக்கி, மக்களின் வாழ்க்கைக்கு பயனளிக்க கூடிய ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு பாஜக எப்போதுமே தயாராக உள்ளது. இவ்வாறு அமித்ஷா டுவிட் செய்துள்ளார்.
இந்த நிலையில், திருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்திய முத்துராமன் என்பவரை பாஜக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்குவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். சர்ச்சைகளை தொடர்ந்து, பாஜக மேலிடமும் சிலைகள் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துவிட்டதன் அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.