'பெரும் வருத்தத்துடனும், அக்கறையுடனும் எழுதுகிறோம்'.. 4 நீதிபதிகளின் கடிதத்தில் என்ன இருக்கிறது?
Recommended Video
டெல்லி: உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் 4 பேர் ஒன்றாக இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்கள். இந்த பேட்டியில் அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய செயல்பாடு குறித்து குற்றஞ்சாட்டினார்கள்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேட்டியில் அவர்கள் தலைமை நீதிபதி குறித்தும் குற்றச்சாட்டு வைத்து உள்ளனர். நீதித்துறை மிகவும் மோசமான திசையை நோக்கி செல்கிறது என்றும் கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு கடிதம் ஒன்றும் எழுதியுள்ளனர். அதை தற்போது பொதுவில் மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வெளியிட்டு இருக்கிறார்கள்.
எப்படி ஆரம்பிக்கிறது
'பெரும் வருத்தத்துடனும், அக்கறையுடனும் எழுதுகிறோம்' என்று இந்த கடிதம் ஆரம்பிக்கிறது. அதில் ''சமீப நாட்களாக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட சில உத்தரவுகள் மொத்த நீதித்துறையின் செயல்பாட்டையும் பாதிக்கும் வகையில் இருக்கிறது. மேலும் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது'' என்று குறிப்பிட்டு உள்ளனர்.
மோசமாகிவிட்டது
மேலும் ''ஆங்கிலேயர் காலத்தில் இருந்து சென்னை, கொல்கத்தா, மும்பை நீதிமன்றங்கள் செயல்பட்டு இருக்கிறது. இந்த நீதிமன்றங்கள் மிகவும் பாரம்பரியமான முறையில் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால் தற்போது உச்ச நீதிமன்றத்தின் செயல்பட்டால் இந்த உயர்நீதி மன்றங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
வித்தியாசம் இல்லை
அதேபோல் ''தலைமை நீதிபதி வழக்குகள் குறித்தும், நீதிபதிகள் அதை விசாரிப்பது குறித்தும் பட்டியலிடுவது நடந்து வருகிறது. அது சட்டமாக இல்லாத போதும் அதுதான் தற்போது நடைமுறையில் இருக்கிறது. தலைமை நீதிபதிதான் தற்போது வழக்குகளை பட்டியலிட்டு முன்னுரிமை, தேவை அடிப்படையில் அதை நீதிபதிகளுக்கு பிரித்து கொடுக்கிறார். நீதிபதிகளில் தலைநீதிபதி சட்டப்படி முதன்மையானவர்தான். ஆனால் மற்ற நீதிபதிகள் அவருக்கு தாழ்ந்தவர்களோ, உயர்ந்தவர்களோ இல்லை.'' என்று குறிப்பிட்டு உள்ளனர்.
வழக்குகளை பிரித்து கொடுப்பது
மேலும் ''பொதுவாக வழக்குகளை சரியான முறையில் அனைவருக்கும் பட்டியலிட்டு கொடுக்க தலைமை நீதிபதி முயற்சிக்க வேண்டும். இதுவே நீதித்துறைக்கு வலிமையை கொடுக்கும். ஆனால் எந்த முன்னுரிமையும் இல்லாமல் சில குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு வழக்குகள் கொடுக்கப்படுகிறது. இதை பெரிய முயற்சி எடுத்தாவது தடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.
|
நீதிபதி கர்ணன்
நீதிபதி கர்ணன் வழக்கை கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கும் அவர்கள், '' நீதிபதி கர்ணன் வழக்கில் 7 பேர் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில் சில அறிவுரைகள் இருக்கிறது. நீதிபதிகளை நீக்கவும், தேர்வு செய்யவும் உள்ள நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதில் கூறியுள்ளனர். நீதிபதிகள் தேர்வு வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். அனைத்து நீதிமன்றங்களுக்கு இந்த விவரம் தெரியவேண்டும்'' என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.