புகார்களால் புயலை கிளப்பிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்.. 4 சீனியர் நீதிபதிகளின் பின்னணி என்ன?
இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து இருக்கிறார்கள்.
Recommended Video
டெல்லி: இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நான்கு பேரும் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக புகார் அளித்து உள்ளனர். நீதி துறையில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இவர்களின் சரமாரியான குற்றச்சாட்டுகளுக்கான உண்மையான 100 சதவிகித காரணம் இன்னும் தெரியவில்லை. இவர்கள் நான்கு பேரும் மிக அதிக அனுபவம் கொண்ட நீதிபதிகள் ஆவார்கள்.
யார் ரஞ்சன் கோகாய்
நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்தியாவில் இருக்கும் மூத்த நீதிபதிகளில் ஒருவர். தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ராவிற்கும் இவருக்கும்தான் பெரிய போட்டி நிலவி வந்தது. கடைசி நேரத்தில் தீபக் மிஸ்ரா தலைமை பொறுப்புக்கு தேர்வாகினார். மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவரது தந்தை 'கேஸாப் சந்திர கோகாய்' அசாம் மாநிலத்தில் முதல்வராக இருந்தவர். வடகிழக்கு மாநிலத்தில் இருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு நியமிக்கப்பட்ட முதல் நீதிபதி இவர்தான்.
நீதிபதி மதன் லோகுர்
அதிரடியான தீர்ப்பு வழங்குவதற்கு பெயர் பெற்றவர் மதன் லோகுர். 1977ல் இருந்து இவர் பார் கவுன்சில் உறுப்பினராக இருக்கிறார். ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த இவர் முக்கியமான தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார். 2012ல் மத ரீதியாக அரசு அளித்த 4.5% கோட்டாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். எந்த அடிப்படையில் மத ரீதியாக இடஒதுக்கீடு வழங்கினீர்கள் என்று கேட்டார். அதேபோல் ரெட்டி சகோதரர்கள் வழக்கில் சிபிஐ நீதிபதி பட்டாபி ராமராவை அதிரடியாக நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.
நீதிபதி குரியன் ஜோசப்
கேரளாவை சேர்ந்த குரியன் ஜோசப் 1979ல் இருந்து பார் கவுன்சில் உறுப்பினராக இருக்கிறார். இவர் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவின் அமர்வில் இருந்த போது முக்கிய தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கை சிபிஐக்கு மாற்றியது இவர்தான். முக்கியமாக முத்தலாக் நடைமுறைக்கு எதிரான தீர்ப்பை வழங்கியது இவர்தான்.
நீதிபதி செல்லமேஸ்வர்
செல்லமேஸ்வர் கேரள ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர். ஆதார் கார்டு இல்லாதவர்களுக்கு அடிப்படை உரிமைகள் சரியாக கிடைக்காது என்ற தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் இவரும் இடம்பிடித்து இருந்தார். மிக முக்கியமாக, மக்களின் கருத்துரிமைக்கு ஆதரவாக அடிக்கடி குரல் கொடுத்துள்ளார். செல்லமேஸ்வர் இடம்பெற்ற அமர்வுதான், சமூக வலைத்தளங்களுக்கு கிடுக்கிப்பிடி போட்ட 66எ சட்டத்தை நீக்கியது. இதன் மூலம் சமூக வலைத்தளத்தில் மக்கள் கருத்து கூறும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.