சபரிமலை கோயிலில் பெண்களுக்கு எப்போது அனுமதி?.. தேவசம் போர்டு அறிவிப்பு
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலுக்கு பெண்களுக்கு வரும் நவம்பர் 16-ஆம் தேதி முதல் அனுமதி என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என 4 பேர் கொண்ட நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். உச்சநீதிமன்றத்தை தீர்ப்பை அமல்படுத்துவது மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து முதல்வர் பினராயி விஜயனுடன் தேவசம் போர்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
தீர்ப்பை மேல்முறையீடு செய்வது குறித்து நேற்றைய தினம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர்.
முடிவு
இதுகுறித்து தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில் ஆரம்பத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய விருப்பம் இல்லாத நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவை அப்படியே அமல்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்து உள்ளது.
போதிய வசதிகள்
தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பையில் கூடுதலாக 600 கழிவறைகளும், ஓய்வறைகளும் கட்டப்படும். வெள்ளப்பெருக்கின் போது பம்பையை கடந்து சன்னிதானம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனை கருத்தில் கொண்டு பம்பை மலை உச்சி முதல் கணபதி கோவில் வரை ரூ.25 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படும்.
வாய்ப்பு இல்லை
கேரளாவில் தற்போது மழை வெள்ள சேத பணிகள் நடந்து வருவதாலும், பெண்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டியது இருப்பதாலும் இம்மாதம் 17-ஆம் தேதி நடைபெறும் ஐப்பசி மாத பூஜைக்கு பெண்களை அனுமதிக்க வாய்ப்பு இல்லை.
தரிசிக்கலாம்
அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து முடித்த பிறகு வருகிற மண்டல, மகர விளக்கு சீசன் முதல் சபரிமலை தரிசனத்திற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவர். அதாவது அடுத்த மாதம் 16-ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. அன்று முதல் சபரிமலைக்கு பெண்கள் வந்து ஐயப்பனை தரிசிக்கலாம் என்றார் அவர்.