பொசுக்கென்று போராட்டத்தில் உட்கார்ந்து விடுவதுதான் தேவகவுடா ஸ்டைல்
பெங்களூர்: காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க இன்று கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடா, இதற்காக பெங்களூரில் இன்று கால வரையற்ற உண்ணா விரதம் தொடங்கியுள்ளார் தேவகவுடா.
முன்னாள் பிரதமர் என்ற கிரீடத்தையெல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு, கர்நாடக மக்களுக்காக வீதியில் உட்கார்ந்துவிடுவது தேவகவுடா வாடிக்கை.
அவரது அரசியல் வாழ்க்கையில் நீண்ட கால போராட்டம் என்பது, பெங்களூர்-மைசூர் நடுவே நந்தி காரிடார் நிறுவனம் அமைத்த நைஸ் சாலைக்கு எதிரானது. சுமார் 13 வருட காலம் தேவகவுடா நீண்ட போராட்டங்களை நடத்தி அந்த திட்டத்தை இதுவரை செயல்படுத்தவிடாமல் வைத்துள்ளார்.
இப்போது நைஸ் சாலை வெறுமனே, பெங்களூரின் புறநகர் சாலை என்ற அளவில் உள்ளதே தவிர, மைசூருக்கு சென்று சேர முடியவில்லை. அதேநேரம், நந்தி காரிடார் நிறுவன தலைவர் அசோக் கெனி, தேர்தலில் போட்டியிட்டு, எம்எல்ஏவாகிவிட்டபோதிலும், துரும்பையும் அவரால் கிள்ளிப்போட முடியவில்லை.
2011ல் இப்படித்தான், எடியூரப்பா முதல்வராக இருந்தபோது அவரது வீட்டுக்கு முன்னால் போய் உட்கார்ந்து தர்ணா செய்ய ஆரம்பித்துவிட்டார். தன்னை தேர்ந்தெடுத்த ஹாசன் லோக்சபா தொகுதிக்கு எடியூரப்பா அரசு கேட்ட திட்டங்களை அறிவிக்கவில்லை எனப்து போராட்டத்திற்கு காரணம்.
கடந்த ஆண்டு ஜூலையில், விவசாயிகள் பிரச்சினையை பேச லோக்சபா சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, நாடாளுமன்றம் எதிரே உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் தேவகவுடா.
2012 டிசம்பர் மாதம், காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார் தேவகவுடா.